Last Updated : 13 Dec, 2019 05:02 PM

 

Published : 13 Dec 2019 05:02 PM
Last Updated : 13 Dec 2019 05:02 PM

பெண்களிடம் மோசமாக நடக்க மாட்டோம்: பள்ளி மாணவர்களிடம் உறுதிமொழி பெற கேஜ்ரிவால் அரசு முடிவு

பெண்களிடம் மோசமாக நடக்க மாட்டோம் என்று பள்ளி மாணவர்களிடம் உறுதிமொழி பெற உள்ளதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், ''பெண்களிடம் தவறாக நடக்கக் கூடாது என்று பள்ளிகளில் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படும். இதற்காக பள்ளிகளில் மாணவர்களிடம் உறுதிமொழி பெற உள்ளோம். எந்தவொரு பெண்ணிடமும் என்றும் தவறாக நடக்க மாட்டோம் என்ற உறுதி பெறப்படும். இந்த உறுதிமொழி ஒருமுறை மட்டுமே பெறப்படாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும்.

அதேபோல வீடுகளில் இருக்கும் ஒவ்வொரு தாயும், தனது மகனிடம் இதுகுறித்து விரிவாகப் பேச வேண்டும்.

பெண்களுக்கு எதிராக எந்தவொரு குற்றத்தையும் இழைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட முடியாது என்று பெண்கள் உணர்த்த வேண்டும். அப்படித் தவறு செய்யும்பட்சத்தில் இந்த சமூகம் மட்டுமல்ல குடும்பமும் சேர்ந்தே அவனைப் புறக்கணிக்க வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துக்கூற வேண்டும்.

வீடுகளில் சகோதரனைக் கொண்ட சகோதரிகளும் இதுகுறித்துப் பேச வேண்டும். உங்களின் அண்ணனோ தம்பியோ நல்லவர் என்று நினைத்தாலும் அவருடன் பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேச வேண்டியது அவசியம். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு சமுதாயமாக இதைச் செயல்படுத்த வேண்டும்'' என்று கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x