Published : 13 Dec 2019 12:03 PM
Last Updated : 13 Dec 2019 12:03 PM

ஜேஎன்யூ போராட்ட எதிரொலி: ஐஐடி மேற்படிப்புக் கட்டண உயர்வைத் தள்ளிவைக்க மத்திய அரசு முடிவு

ஐஐடி மேற்படிப்புக் கட்டண உயர்வு அமல்படுத்தலைத் தள்ளிப்போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் நாடு முழுவதும் 23 ஐஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பி.இ., பி.டெக். உள்ளிட்ட படிப்புகளும் எம்.டெக். உள்ளிட்ட படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் ஐஐடி கவுன்சில் கூட்டம் நடந்தது. அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் எம்.டெக். படிப்புக்கான கட்டணத்தை உயர்த்த முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்த செய்தி வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

எனினும் கட்டண உயர்வைத் தள்ளிப்போட அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள், கட்டண உயர்வை எதிர்த்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மத்திய அரசு ஐஐடியில் கட்டண உயர்வை அமல்படுத்த யோசித்து வருகிறது. கட்டண உயர்வு அமல்படுத்தலைத் தள்ளிப்போடவும் அரசு முடிவு செய்துள்ளது.

ஐஐடி கல்வி நிறுவன மேற்படிப்புகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவை அளித்த ஆலோசனையின் பேரிலேயே கட்டண உயர்வை அமல்படுத்தும் முடிவை மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x