Published : 11 Dec 2019 08:44 AM
Last Updated : 11 Dec 2019 08:44 AM
பார்வை திறன் குறைபாடு, செவித்திறன் குறைபாடுகளினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காக தமிழகம் முழுவதும் 20 அரசு சிறப்புப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதால் மாற்றுத் திறனாளி மாணவ - மாணவியர், ஆசிரியர்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் துணைத் தலைவர் அரங்கராஜா கூறியதாவது: சிறப்புப் பள்ளிகளில் படப்பிடிப்புகள் நடக்கும்போது, படக்குழுவினர் உபயோகமற்ற பொருட்களை அப்படியே விட்டுச் செல்கின்றனர்.
குப்பைகளை அதிகம் போடுகின்றனர். இதனால் மாற்றுத் திறனாளி மாணவ - மாணவியர் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சனிக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் படப்பிடிப்பு நடக்கும்போது பணிக்கு வரும் ஆசிரியர்களும், விடுதிகளில் தங்கி இருக்கும் மாணவ - மாணவியரும் பாதிக்கப்படுகின்றனர்.
மாற்றுத் திறனாளி மாணவ - மாணவியர் மனதளவிலும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. எனவே, சிறப்புப் பள்ளிகளிலும் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT