Published : 11 Dec 2019 07:38 AM
Last Updated : 11 Dec 2019 07:38 AM

டெட் தேர்வில் தேர்ச்சி பெறும் பொறியியல் பட்டதாரிகள் பள்ளி கணித ஆசிரியராகலாம்

தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகளைப் போல பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்களும் பி.எட் படிக்க 2015-16-ம் ஆண்டு முதல் அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் மொத்தமுள்ள பி.எட் இடங்களில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படி பி.இ, பி.டெக் பட்டதாரிகள் இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளின் கீழ் பி.எட் படிப்புகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். காலப்போக்கில் பிஎட் படிப்பில் சேர பொறியியல் பட்டதாரிகள் அவ்வளவுஆர்வம் காட்டாததால் அவர்களுக்கான இடங்கள் 2018-ம் ஆண்டு 10 சதவீதமாக குறைக்கப்பட்டன.

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி மத்திய, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (‘டெட்‘) தேர்ச்சி பெற்றால் மட்டுமே அனைத்துவிதமான பள்ளிகளிலும் ஆசிரியராக (இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்) பணிபுரிய முடியும். ஆனால், கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட ‘டெட்’ தேர்வின்போது பி.எட் முடித்த பொறியியல் பட்டதாரிகள் தேர்வெழுத அனுமதிக்கப்படாததால், அவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பி.எட் படிப்புகளில் சேர பொறியியல் பட்டதாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இந்த விவகாரம் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், இளநிலை பொறியியல் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்கள் ‘டெட்’ தேர்வு எழுத உயர்கல்வித் துறை தற்போது அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி பி.இ படிப்பில் எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்து இருந்தாலும் அவர்கள் பி.எட் முடித்து பின்னர் ‘டெட்’ தேர்வை எழுதி பள்ளிகளில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு பட்டதாரி கணித ஆசிரியராகப் பணிபுரியலாம் என்று உயர்கல்வித் துறையின் முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x