Published : 10 Dec 2019 01:40 PM
Last Updated : 10 Dec 2019 01:40 PM

குடும்ப சூழலால் ஐடிஐ படிப்பையே முடிக்காத 21 வயது இளைஞர்: மனித ரோபோவை உருவாக்கி சாதனை

குடும்ப சூழலால் ஐடிஐ படிப்பையே முடிக்காத 21 வயது இளைஞர், மனித ரோபோவை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

மணிப்பூரைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் இரோம் ரோஷன். இம்பால் மாவட்டத்தைச் சேர்ந்த இவரின் தந்தை மரம் வெட்டும் தொழிலாளி. ஐடிஐ படிப்பில் சேர்ந்த ரோஷன், குடும்ப வறுமை காரணமாக முதல் ஆண்டோடு படிப்பை நிறுத்தினார்.

ஆர்வம் காரணமாக தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்திய அவர், இரண்டு ஆண்டுகள் பாடுபட்டு உழைத்து மனித ரோபோவை உருவாக்கி உள்ளார். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் இந்த ரோபோ ரூ.1.3 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மொபைல் போன் மூலம் இயக்கக்கூடிய வகையிலான ரோபாவை ரோஷன் உருவாக்கி உள்ளார். குரல் கட்டளைகளுக்கு செவிசாய்க்கும் ரோபா இனிய குரலில் பதிலும் சொல்கிறது.

இதுகுறித்துப் பேசும் ரோஷன், ''ரோபோ தொழில்நுட்பம் தெரிந்த யாரிடமும் சென்று உதவி கேட்கவில்லை. நானாகவே இணையத்தில் தேடித்தேடி ரோபோ உருவாக்கம் குறித்துக் கற்றுக்கொண்டேன். ஆங்கிலத்தில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு ரோபோ பதில் சொல்லும். 100 மீ. தொலைவில் உள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு வந்து நம்மிடம் கொடுக்கும். எலக்ட்ரானிக் பொருட்களை அடையாளம் கண்டுபிடித்துச் சொல்லும்.

மெஷின் லெர்னிங் தொடர்பாக படித்து வருகிறேன். அதன் மூலம் ரோபோவை இன்னும் மேம்படுத்த உள்ளேன். முதல்வர் பிரேன் சிங், என்னுடைய ஆய்வுக்காக ரூ.1 லட்சம் தந்து உதவியுள்ளார்'' என்கிறார்.

ரோஷனுக்கு மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் மனித ரோபோ பேசும் வீடியோவையும் அவர் இணைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x