Last Updated : 09 Dec, 2019 02:37 PM

 

Published : 09 Dec 2019 02:37 PM
Last Updated : 09 Dec 2019 02:37 PM

பள்ளிகளின் குளிர்கால விடுமுறையைக் குறைத்த டெல்லி அரசு

காற்று மாசு காரணமாக இழந்த வேலை நாட்களை ஈடுகட்ட, பள்ளிகளுக்கு விடப்படும் குளிர்கால விடுமுறையைக் குறைத்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் கடந்த அக்டோபர் 30-ம் தேதி அன்று, காற்று மாசு குறியீட்டின் அளவு உச்சபட்சமாக நள்ளிரவு 12.30 மணி அளவில் 582 புள்ளிகளைத் தொட்டது. இதனால் காற்று மாசு இந்த ஆண்டில் இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலையைத் தொட்டு, நெருக்கடி நிலையை எட்டியது. மக்கள் சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டனர்.

அதையடுத்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆணையம் டெல்லி மற்றும் என்சிஆர் மண்டலத்தில் கட்டிடப் பணிகளில் ஈடுபடத் தடைவிதித்தது. சரக்கு வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு, கட்டுமானப் பணிகள் நிறுத்தம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

பள்ளிகள் மூடல்

குழந்தைகள் வேகமாக சுவாசிக்கும் தன்மை கொண்டவர்கள் என்பதால், குழந்தைகளின் உடல்நலன் குறித்துப் பெற்றோர் அனைவரும் கவலையடைந்தனர். அதைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில் இழந்த வேலை நாட்களை ஈடுகட்டும் வகையில், குளிர்கால விடுமுறையைக் குறைக்க டெல்லி அரசு முடிவெடுத்துள்ளது. வழக்கமாக அரசுப் பள்ளிகளில் டிசம்பர் 28 முதல் ஜனவரி 15 வரை குளிர்கால விடுமுறை அளிக்கப்படும். எனினும் இம்முறை விடுமுறையைக் குறைத்து கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், ''6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 1 முதல் ஜனவரி 15 வரை விடுமுறை விடப்படுகிறது. மழலையர் கல்வி முதல் 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு, டிச.28 முதல் ஜன.15 வரை விடுமுறை இருக்கும்.

நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட காற்று மாசு காரணமாகவும் ஜூலையில் உருவான வெப்ப அலைகள் காரணமாகவும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதை ஈடுகட்டவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x