Published : 09 Dec 2019 09:31 AM
Last Updated : 09 Dec 2019 09:31 AM

தலை முடிக்கு டை அடித்தால் பெண்களுக்கு புற்றுநோய் வரும்: அமெரிக்க அரசு நிறுவனம் அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன்

நிரந்தர டை (மை) மற்றும் முடியை நேராக்கும் கருவி பயன்படுத்தினால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர அதிக வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அரசு சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

வெள்ளை முடியை மறைப்பதற்காக தற்போது அதிகமான மக்கள் கறுப்பு மையை பயன்படுத்துகிறார்கள்.

மேலும், இயற்கையாக இருக்கும் முடியின் நிறத்தை தங்களுக்கு பிடித்தமான நிறத்தில் மாற்றி அமைக்க வேதி பொருட்கள் கொண்டமை பூச, கருவிகளும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள மக்களுக்கு இயற்கையாகவே கறுப்பு நிறத்தில் முடி உள்ளது. ஆனால், அமெரிக்கா போன்ற மேற்கத்திய மக்களுக்கு இளம்பொன் நிறமாகவும், இளம் சிவப்பு நிறத்திலும் தலை முடி உள்ளது.

இதனால், இயற்கை நிறத்தை மாற்றவும், சுருள் முடியை நேராக்கவும் அதிகமான மக்கள் மையை பயன்படுத்துகிறார்கள். இதனால், புற்றுநோய்சாத்தியக்கூறுகள் உள்ளதா எனஅமெரிக்க அரசின் தேசிய சுற்றுச்சூழல் சுகாதார அறிவியல் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இந்தஆய்வின் முடிவுகள், சர்வதேச புற்றுநோய் இதழில் வெளியாகியுள்ளது.

அதில், நிரந்தர மை மற்றும் முடியை நேராக்கும் வேதி பொருட்களைக் கொண்ட கருவி பயன்படுத்தினால், புற்றுநோய் வருகிறதா என்பது குறித்து சுமார் 47,000 பெண்களிடம் ஆய்வு செய்யப்பட்டது.

அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், குறைந்தது ஐந்து முதல் எட்டு வாரங்களுக்கு ஒருமுறை மை அடிக்க வேதிப் பொருட்களை பயன்படுத்தும் பெண்களில்,மார்பக புற்றுநோயை உருவாக்கும்வாய்ப்பு சுமார் 30 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

முடியை நேராக்க பெண்கள் பயன்படுத்தும் வேதிப்பொருட்களால், புற்றுநோய் வர அதிக சாத்தியக்கூறுகள் உள்ளது.

இதனை பயன்படுத்துவதால், அமெரிக்க வெள்ளை பெண்களை காட்டிலும், ஆப்பிரிக்க அமெரிக்க பெண்களுக்கு புற்றுநோய் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது. தலை முடிக்கு மையை பூசாத பெண்களை விட, மை பூசும் பெண்களுக்கு மார்க புற்றுநோய் வருவதற்கு 9 சதவீதம் அதிகமான வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து ஆய்வை மேற்கொண்ட டேல் சாண்ட்லர் கூறுகையில்,“பெண்களை அதிகம் தாக்கும் மார்பகபுற்றுநோய் குறித்து பல ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம். உடலில்நேரடியாகப் படும் வேதிப் பொருட்களை பெண்கள் தவிர்த்து, புற்றுநோய் சாத்தியக்கூறுகளை ஒழிக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x