Published : 07 Dec 2019 08:03 AM
Last Updated : 07 Dec 2019 08:03 AM

அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த ஆலோசனை கூட்டம்: டிச.9 முதல் 19 வரை நடக்கிறது

அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் டிசம்பர் 9 முதல் 19-ம் தேதி வரை மண்டலவாரியாக நடைபெறுகிறது

தமிழக பள்ளிக் கல்வியில் நிர்வாகரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி துறை இயக்குநர்களைக் கண்காணிக்க ஆணையர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டது. புதிய ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள சிஜி தாமஸ் வைத்தியன், முதல்கட்டமாக சென்னையில் சில பள்ளிகளில் களஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து மண்டலவாரியாக ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்த ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன் தலைமையில் மண்டலவாரியாக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களும் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம் என 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி டிசம்பர் 9 முதல் 19-ம் தேதி வரை மண்டலவாரியாகக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதன்மைக் கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், குறுவள மைய ஆசிரியர்கள் என 1,280 பேர் பங்கேற்க உள்ளனர். மேலும், கூட்டத்தில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் பெயர்கள், கூட்டம் நடைபெறும் இடம் குறித்த விவரங்களை commissionersedu@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உடனே அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுதவிர சுற்றுப்பயணத்தின்போது பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வாய்ப்புள்ளதால் போதிய முன்னேற்பாட்டுடன் தயாராக இருக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x