Published : 06 Dec 2019 04:20 PM
Last Updated : 06 Dec 2019 04:20 PM

அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சிகள்: மத்திய அரசு தகவல்

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் தற்காப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாநிலங்களவையில் பேசும்போது, ''பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, அவர்களுக்குத் தற்காப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதற்காக சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் மாதாமாதம் தலா ரூ.3,000 தொகை, 3 மாதங்களுக்கு வழங்கப்பட்டது. இதைக் கொண்டு தற்காப்புப் பயிற்சி, சுய பாதுகாப்புப் பயிற்சிகள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மாணவிகளுக்குக் கற்பிக்கப்பட்டன'' என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே 2015-ம் ஆண்டு சிபிஎஸ்இ தனது கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் 1 முதல் 10-ம் வகுப்பு மாணவிகளுக்கு சுய பாதுகாப்புப் பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்றும் ஆண்டுக்கு இரு முறை, ஒரு வார காலத்துக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜூடோ, டேக்வாண்டோ, குத்துச்சண்டை உள்ளிட்ட மேலும் சில பயிற்சிகள் இதில் வழங்கப்படுகின்றன. பள்ளிகளில் பிராந்திய அளவிலும் அடுத்ததாக தேசிய அளவிலும் தற்காப்புப் பயிற்சி குறித்த போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x