Published : 06 Dec 2019 11:49 AM
Last Updated : 06 Dec 2019 11:49 AM
மாணவர்கள் பள்ளிக்கு எடுத்துச் செல்லும் புத்தகப் பைகளின் எடை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளிகளில் மாணவர்கள் அதிக எடை கொண்ட புத்தகப் பைகளைப் பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து மாநிலங்களைவையில் நேற்று கேள்வியொன்றுக்குப் பதிலளித்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ''புத்தகப் பைகளின் எடையைக் குறைக்க புதிய கொள்கையை உருவாக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக அமைச்சகம் சார்பில் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு, கொள்கை முன்வடிவு தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வரைவு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், தெலங்கானா, நாகாலாந்து, மேற்கு வங்கம், கர்நாடகா, உத்தரகாண்ட், அசாம், உத்தரப் பிரதேசம், கோவா, கேரளா, ஒடிசா, மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், குஜராத், ஹரியாணா, மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களும், டெல்லி, தாத்ரா நாகர் ஹவேலி, சண்டிகர் மற்றும் லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களும் புத்தகப் பைகளின் எடையைக் குறைக்க உத்தரவிட்டுள்ளன.
குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் தேவையைக் கருத்தில் கொண்டு விளையாட்டு மற்றும் உடற்கல்வித் துறை, விளையாட்டு, யோகா மற்றும் உடல் சார்ந்த இயக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டங்களில் 'வைட்டமின் டி' குறைபாடு குறித்து விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது'' என்று பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT