Published : 05 Dec 2019 05:59 PM
Last Updated : 05 Dec 2019 05:59 PM
ராகுல் காந்தியின் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்த 12-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி, 3 நாள் சுற்றுப்பயணமாக கேரளா வந்துள்ளார். மலப்புரம் அருகே கருவாரக்குண்டு என்னும் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வகத்தை ராகுல் காந்தி இன்று திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து பேச ஆரம்பித்த அவர், அங்குள்ள யாராவது தனது பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்க்கத் தயாரா என்று கேள்வி எழுப்பினார். அதைக் கேட்ட 12-ம் வகுப்பு மாணவி சஃபா ஜெபின் தைரியமாக எழுந்து வந்தார்.
ராகுல் காந்தி பேசப்பேச அவரின் பேச்சை, உடனடியாக மலையாளத்தில் மொழிபெயர்த்தார் சஃபா ஜெபின். பேசி முடித்தபிறகு, சஃபாவைப் பாராட்டிய ராகுல், அவருக்கு சாக்லேட்டைப் பரிசாக அளித்தார்.
இதுகுறித்து மாணவி சஃபா கூறும்போது, ''எனக்கு ராகுல் காந்தியைப் பிடிக்கும். அவருடன் ஒரே மேடையைப் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதை மகிழ்ச்சியுடன் பயன்படுத்திக் கொண்டேன். எனினும் சிறிது பதற்றமாகவே இருந்தது. கடைசியில் என்னுடைய திறனை ராகுல் பாராட்டினார்'' என்றார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவைக் காண
Shri @RahulGandhi's addresses a group of young students as he inaugurates the new science block in Karuvarakundu school in Malappuram, Wayanad. pic.twitter.com/GnqeYLrJP1
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT