Published : 05 Dec 2019 03:37 PM
Last Updated : 05 Dec 2019 03:37 PM

மாமல்லபுரத்தில் பார்வையாளர் கட்டணம்: ரத்து செய்யக்கோரும் சிறுமி- வைரல் வீடியோ

மாமல்லபுரத்தில் பார்வையாளர் கட்டணத்தை ரத்து செய்யுமாறு சிறுமி ஒருவர், அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாமல்லபுரத்தில் உலகப் புகழ்ப் பெற்ற கலைச் சின்னங்கள் உள்ளன. இந்த இடத்தில் சமீபத்தில் இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துக் கொண்டனர். இவர்கள் சந்திப்பையொட்டி மாமல்லபுரம் புதுப் பொலிவு பெற்றது. இவர்கள் இருவரும் இணைந்து வெண்ணெய் உருண்டைப் பாறை பகுதியில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்தப் புகைப்படங்கள் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்கள் என அனைத்திலும் பிரபலமாகின.

இதைத் தொடர்ந்து வெண்ணெய் உருண்டைப் பாறை பகுதியை சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம் ஆகிய பகுதிகளை சுற்றிப் பார்க்க சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து ரூ.40 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டினருக்கு ரூ.600 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மற்ற இடங்களான அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டைப் பாறை ஆகிய இடங்களை இதுவரையில் சுற்றுலா பயணிகள் கட்டணம் இல்லாமல்தான் கண்டு ரசித்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது ரூ.40 கட்டணம் என்கிற வரையறைக்குள் வெண்ணெய் உருண்டை பாறை பகுதியையும் கொண்டு வந்துள்ளனர். அதாவது ரூ.40 கட்ட ணம் செலுத்தினால் கடற்கரை கோயில், ஐந்து ரதம் ஆகியவற் றோடு வெண்ணெய் உருண்டைப் பாறை பகுதியையும் அருகில் சென்று கண்டு ரசிக்கலாம். கட்டணம் செலுத்தாமல் வெண்ணெய் உருண்டை பாறையை கண்டு ரசிக்க விரும்பினால் கம்பி வேலிக்கு வெளியே தூரத்தில் இருந்துதான் பார்க்க முடியும். அருகில் சென்று சுற்றிப் பார்க்க முடியாது.

இதையறிந்த சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியைத் தெரிவித்தனர். எனினும் அரசுத்தரப்பில் கட்டணம் வசூலிப்பது தொடர்கிறது. இந்நிலையில் இதுகுறித்து சிறுமி ஒருவர், கட்டணத்தை ரத்து செய்யுமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பேசும் சிறுமி, ''தலைவர்கள் சந்திப்பால் என்ன லாபமோ, நஷ்டமோ தெரியவில்லை. ஆனால் இங்கு ஒரு நபருக்கு ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காரை நிறுத்த ரூ.100 தனியாகக் கேட்கிறார்கள். இங்கு ஏராளமான மக்கள் வருகிறோம்.

மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளவர்களும் வந்து கொண்டிருக்கின்றனர். அரசே இவ்வளவு கட்டணம் வசூலிப்பது நியாயமில்லை. டிக்கெட் வாங்கும் முறையை ரத்து செய்யுங்கள். இந்த வீடியோ அரசின் காதுகளுக்குச் சென்றுசேரும் வரை ஷேர் செய்யுங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

சிறுமியின் கோரிக்கைக்கு ஆதரவாக ஏராளமான குரல்கள் எழுந்துள்ளன. இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x