Published : 05 Dec 2019 08:27 AM
Last Updated : 05 Dec 2019 08:27 AM
மாநிலத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் எளிமையான திட்டத்தை திரிபுரா அரசு அறிமுகம் செய்துள்ளது.
இதுதொடர்பாக மாநில உணவு மற்றும் பொது வழங்கல் துறையின் கூடுதல் செயலாளர் திரேந்திர தேபர்மா கூறியதாவது:ரேஷன் கார்டு உள்ள நபர்கள் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கடையில் மட்டும்தான் ரேஷன் பொருட்களை வாங்க முடியும். ஆனால், தற்போது திரிபுராவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய திட்டம் மூலம், மாநிலத்தில் எந்த ரேஷன் கடையில் வேண்டுமென்றாலும், தங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
அதற்காக, பயனாளிகளின் ஆதார் கார்டு மற்றும் கைரேகை பதிவு செய்யப்பட்ட தரவுகளை கொண்ட சர்வர்களுடன், இணையம் மூலம் அனைத்து ரேஷன் கடைகளும் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் வேறு ஊரில் உள்ள ரேஷன் கடையில்கூட பயனாளிகள் ரேஷன் பொருட்களை வாங்க முடியும்.
அதேபோல் ஒருவர் இரண்டு முறை ரேஷன் பொருட்களை வாங்க முடியாது. மேலும் பயனாளிகள் மட்டுமே தங்களுக்கான ரேஷன் பொருட்களை வாங்க முடியும். தற்போது, 1,810 ரேஷன் கடைகள் திரிபுராவில் உள்ளது. அதில் 392 கடைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதைபோல், விவசாயிகளிடம் இருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. முதற்கட்டமாக 50,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய திட்டம் உள்ளது. மேலும், அதிநவீன அரிசி ஆலைகள் அமைக்கவும் அரசு ஊக்கம் கொடுத்து வருகிறது. இவ்வாறு தேபர்மா தெரிவித்தார்.
சர்வர் முறையில் பயனாளிகளை இணைக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திதான், ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டமும் வரவுள்ளது. அந்த தொழில்நுட்பத்தை வேறு எந்த துறையில் பயன்படுத்தலாம் என்று சிந்தனை செய்து, புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க முயற்சி செய்யுங்கள் மாணவர்களே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT