Published : 04 Dec 2019 05:43 PM
Last Updated : 04 Dec 2019 05:43 PM
உலகிலேயே இளம் வயதில் காப்புரிமை பெற்ற மாற்றுத்திறனாளி சிறுவர் நேற்று குடியரசு துணைத் தலைவரிடம் தேசிய விருது பெற்றுள்ளார்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஹிருதயேஸ்வர் சிங் பாட்டி. தசைநார் தேய்வு நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர், அசாத்திய திறமையுடன் இதுவரை 7 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். அவற்றில் மூன்றுக்கு அவரின் பெயரில் காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது.
அவருக்கு சமூக நலத்துறை மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில், 'தலைசிறந்த படைப்பாற்றல் சிறுவன் 2019' என்ற விருதை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று வழங்கினார்.
இதுகுறித்து அவரின் தந்தை சரோவர் சிங் பாட்டி கூறும்போது, ''அரிதான நோயால் வீல் சேரில் முடங்கியவனாக என் மகன் இருந்தாலும் செஸ் துறையில் ஏராளமான கண்டுபிடிப்புகளை முன்னெடுத்துள்ளார்.
வித்தியாச செஸ் கண்டுபிடிப்பு
வழக்கமான செஸ் போட்டியில் 1 ஜோடி விளையாடும். ஆனால் ஹிருதயேஸ்வர், 3 ஜோடிகள் விளையாடும் வட்ட வடிவிலான செஸ், 30 ஜோடிகள் விளையாடும் வட்ட வடிவிலான செஸ் ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளார். அவற்றுக்கு முறையாக விண்ணப்பித்து காப்புரிமையையும் பெற்றுள்ளார். அத்துடன் 16*16 சுடோகு உள்ளிட்ட 7 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.
அவரைப் பாராட்டி பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளன. பல்வேறு நிகழ்ச்சிகளில் மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தி ஹிருதயேஸ்வர் சிங் உரையாற்றி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT