Published : 04 Dec 2019 07:53 AM
Last Updated : 04 Dec 2019 07:53 AM
நாடாளுமன்ற மக்களவையில் எம்.பி.க்களின் கேள்விகளுக்கு உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் நேற்று பதில் அளிக்கையில் கூறியதாவது:
தற்போதைக்கு நாட்டில் எல்லா பயன்பாட்டுக்கும் ஒரே அட்டை வழங்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை.
எனினும், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை தயாரிக்கவும், அதில் தற்போதைய புள்ளிவிவரங்களை 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்க்கவும் மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
2021-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளுக்கு ரூ.8,754.23 கோடியும், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை தயாரிக்க ரூ.3,941.35 கோடியும் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
- பிடிஐ
தயார் நிலையில் கப்பற்படை உள்ளது: தளபதி கரம்பிர் உறுதி
புதுடெல்லி
இந்திய கப்பற்படை தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ஆண்டு பத்திரிகையாளர் சந்திப்புக்கு நேற்று டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கப்பற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பல சவால்கள் உள்ளன. ஆனால், எந்த சவாலையும் சமாளிக்கும் வகையில் கப்பற்படை தயார் நிலையில் உள்ளது.
கப்பற்படையை பலப்படுத்த 41 போர்க்கப்பல்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. முக்கிய 3 விமானம் தாங்கி போர்க் கப்பலை கொள்முதல் செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அண்டை நாடுகளின் சவால்கள் குறித்து கவலைப்படத் தேவையில்லை. எதுவும் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தாது.
இந்தப் பிராந்தியத்தில் கருத்து ஒத்துப்போகும் நாடுகளுடன் இணைந்து பணியாற்ற கப்பற்படை தயாராக உள்ளது. இவ்வாறு கரம்பிர் சிங் கூறினார்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT