Published : 03 Dec 2019 08:13 AM
Last Updated : 03 Dec 2019 08:13 AM
கூடங்குளத்தில் உள்ள அணு மின் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மென்பொருளில் (சாப்ட்வேர்) சிறிய கோளாறு ஏற்பட்டது. இது சைபர் தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. இதுகுறித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அதற்கு பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதில்:
அணுமின் நிலையத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பு, இயந்திரங்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் அமைப்பு ஆகியவற்றுடன் எந்தவொருஇணையதள வசதிகளும் இணைக்கப்படவில்லை. இதனால், மென்பொருளில் ஏற்பட்ட பாதிப்பு, அணு உலை கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
நிர்வாக அமைப்புக்கான மென் பொருளில் கோளாறு ஏற்பட்டதும், அதை ஆராய்வதற்கு இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (ஐஐடி) இயக்குநர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது.
சைபர் பாதுகாப்பை மறு ஆய்வு மேற்கொள்ளவும், ஊடுருவ இயலாதவகையில் வலைதளத்தை வடிவமைத்தல் உள்ளிட்ட இணைய பாதுகாப்புக்களுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள குழு பரிந்துரைத்தது.
குழு பரிந்துரைத்த நடவடிக்கைப் படி, இணையசேவை முழுநேர கண் காணிப்பில் இருக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் மட்டுமில்லை இந்தியாவில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களும் பாதுகாப்பாக இயங்கி வருகின்றன. அணு உலையின் பாதுகாப்புதான் முதலில், அடுத்ததுதான் உற்பத்தி. இவ்வாறு ஜிதேந்திர சிங் பதிலளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT