Published : 02 Dec 2019 10:44 AM
Last Updated : 02 Dec 2019 10:44 AM

ஆங்கிலத்தில் அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்

தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக திருவாரூர் அருகே அரசு பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் சரளமாக பேசி அசத்துகிறார்கள்.

தமிழ் வழிக் கல்வியில் கற்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் என்றாலே சிம்ம சொப்பனம்தான். தாய்மொழி தமிழில் சரளமாகப் பேசுவதை அப்படியே ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்கின்ற ஆசை ஒவ்வொருவருக்கும் இருக்கின்றபோதும், அந்த மொழியின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளாத காரணத்தால்தான், ஆங்கிலத்தைக் கண்டு பெரும்பாலானோர் அஞ்சுகின் றனர்.

இந்த அச்சத்தை பள்ளிக் கல்வியின்போதே போக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் ஆங்கில ஆசிரியர்களுக்கு உள்ளது. இந்தக் கடமையை உணர்ந்து பணியாற்றுகின்ற ஆசிரியர்களிடத்தில் பயின்றதால்தான், தமிழ் வழிக் கல்வியில் பயின்ற நம் முந்தைய தலைமுறையினர் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் திறன் பெற்றனர். ஆனால் தற்போது அரசு பள்ளியில் ஆங்கில பயிற்சி எட்டாக்கனியாகவே மாறிவிட்டது. அதனால்தான், கடன் பெற்றாவது தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டு விட்டனர்.

இத்தகைய சூழலில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் காளாச்சேரி மேற்கு ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளியானது மாணவர்களை முழுமையாக ஆங்கிலம் பேச, எழுதத் தெரிந்தவர்களாக உருவாக்கி சாதனை படைத்து வருகிறது. இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும்திறன் பெற்றவர்கள் என்பதை தொடர்ச்சியாக நிரூபித்து வருகின்ற
னர். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு டெல்லியில் செயல்படும் பிரமெரிக்கா என்ற நிறுவனம்நடத்திய திறன் சார்ந்த சமூகக் கல்விஎன்ற போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று, தாங்கள் ஆற்றிவரும்சமூக பணிகள் குறித்து ஆங்கிலத்திலேயே விளக்கமளித்து கடந்த 6 ஆண்டுகளாக வெற்றி பெற்று வருகின்றனர்.

அமெரிக்கா செல்லும் மாணவி

அதேபோல, கடந்த 2017-18-ம்கல்வியாண்டில், இப்பள்ளி 8-ம் வகுப்புமாணவி பானுப்பிரியா இப்போட்டியில்பங்கேற்று, சிறப்பிடம் பெற்றதன் மூலம் அமெரிக்கா செல்ல தேர்வாகியுள்ளார்.

இத்தகைய சிறப்பு இப்பள்ளிக்கு கிடைக்க காரணமானவர், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ஆனந்த். இவர் ஆங்கிலப் பாடத்தை கற்பிக்கும் முறை மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுஉள்ளது. 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு ஆங்கிலப் பாடம் நடத்தும் ஆசிரியர் டி.ஆனந்த் 6-ம் வகுப்பில் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி, முதலில் ஆங்கில பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்களை எழுத்துக்கூட்டிப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார். தொடர்ந்து அந்தப் பாடத்தில், ஒவ்வொரு வரியிலும் இடம்பெற்றுள்ள பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவை எவை என்பதை அடையாளம் கண்டுபிடிப்பதற்கு உரிய பயிற்சி அளித்தார்.

பெயர்ச் சொல், வினைச் சொற்களை அதிக அளவில் மாணவர்கள் தெரிந்துகொள்வதற்காக அன்றாட செயல்களை மாணவர்கள் மத்தியில் நேரடியாக மவுன மொழியில் செய்து காட்டி, அவற்றை ஆங்கிலத்தில் மாணவர்கள் சொல்ல வேண்டும் என்று பயிற்சி அளித்தார். மேலும், மாணவர்களையே ஆங்கிலச் சொற்களை உள்ளடக்கிய பல்வேறு கலைப் பொருட்களை ஓவியமாக வரையச் சொல்லியும் பயிற்சி அளித்தார். இதன் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெயர்ச் சொற்களையும் 400-க்கும் மேற்பட்ட வினைச் சொற்களையும் தெரிந்துகொண்டு மாணவர்கள் படிப்படியாக ஆங்கிலத்தில் பேசத் தொடங்கிவிடுகின்றனர்.

கதை ஒன்றை புதிதாக உருவாக்கி அதை இப்பள்ளி மாணவர்கள் மத்தியில் கூறினால் அதைஅப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்
துக் கூறும் அளவுக்கு இப்பள்ளி மாணவர்களின் திறன் வளர்ந்து வருகிறது. மேலும், தனியார் பள்ளிகளில் கட்டணம்செலுத்தி பயிற்சி பெற வேண்டிய கர்சிவ்ரைட்டிங் உள்ளிட்ட எழுத்து வடிவங்களை 13 நோட்டுப் புத்தகங்களில் மாணவர்கள் எழுதிப் பழகுகிறார்கள். ஆங்கில ஆசிரியர் ஆனந்தின் அர்ப்பணிப்புடன் கூடிய பணியை பெற்றோர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து ஆங்கில ஆசிரியர் ஆனந்த் கூறியதாவது:

தமிழைப் போலவே ஆங்கிலமும் ஒரு மொழியே. தமிழ் நமக்கு தாய்மொழி என்பதால் அதன் இலக்கணத்தை நாம் வரிக்குவரி சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. ஆனால், ஆங்கிலம் நமக்கு வேற்றுமொழி என்பதால் அதிலுள்ள இலக்கணத்தை நன்றாகத் தெரிந்து கொண்டால்தான் தயக்கமின்றி பேச முடியும். இதை ஆங்கில இலக்கண வகுப்பு என பிரித்து நடத்தாமல் பாடம் நடத்தும்போதே, ஒவ்வொரு வரியிலும் உள்ள ஆங்கில வார்த்தைகளின் அர்த்தத்தையும் விளக்கி நாளொன்றுக்கு குறைந்தது 10 ஆங்கில வார்த்தைகளை அர்த்தத் துடன் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற மனப்பக்குவத்தை மாணவர்களிடம் ஏற்படுத்திவிட்டால், ஆங்கில மொழித் திறனை மாணவர்கள் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வார்கள்.

இந்த பயிற்சியைத்தான் தொடர்ச்சியாக அளித்து வருகிறோம். குறிப்பாகஆங்கில மொழியை மாணவர்கள் தயக்கமின்றிப் பேச வேண்டும் என்றால் ஆங்கில ஆசிரியர்கள் மாணவர்களுடன் ஒன்றிப் பழகவேண்டும். அவர்களிடம் ஆங்கிலத்தில் நட்பாக உரையாடி ஆங்கிலத்தை பேசத் தூண்ட வேண்டும்.

இவ்வாறு ஆனந்த் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x