Published : 01 Dec 2019 08:17 PM
Last Updated : 01 Dec 2019 08:17 PM

தொடரும் மழை: ஒத்திவைக்கப்பட தேர்வுகளின் விவரம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

* நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகள், 4 வளாகங்களின் தேர்வுகள் கனமழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பதிவாளர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

* நாளையும் (02-12-2019), நாளை மறுநாளும் (03-12-2019) தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கான கேங்மேன் நேர்முகத் தேர்வு நடைபெற இருந்தது. தொடர் மழை காரணமாக தேர்வுத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

* சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறவிருந்த பருவத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை பல்கலைக்கழத்தின் கீழ் செயல்படக்கூடிய கல்லூரிகள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ளன. இந்நிலையில் மழையின் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்படுள்ளது. ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. எனவே, நாளை சென்னை பல்கலைக்கழகப் பருவத் தேர்வை நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என்பதைக் கருத்தில்கொண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

* தமிழகம் முழுவதும் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இன்று தேசிய திறன் மேம்பாட்டு (NMMS)தேர்வு நடைபெற இருந்தது. மழையின் காரணமாக இத்தேர்வை தமிழக பள்ளிக் கல்வித்துறை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.

பின்னணி:

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. கடந்த சில நாட்களாக கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், டெல்டா மாவட்டங்கள், மதுரை மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று விடிய, விடிய மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்துக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடப்பட்டது.

மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்துக்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கனமழை தொடர்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் இந்த விடுமுறையை அறிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x