Published : 30 Nov 2019 11:30 AM
Last Updated : 30 Nov 2019 11:30 AM

தாயால் பள்ளிக்கு தூக்கிச் செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவிக்கு தமிழக அரசு உதவி

தாயால் 12 ஆண்டுகள் பள்ளிக்கு தூக்கிச் செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவிக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் உதவி செய்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், பெருங்கோழி பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி. அவரின் ஒரே மகள் திவ்யா. பிறக்கும்போதே கால்களில் குறைபாட்டுடன் பிறந்தார். மாற்றுத்திறனாளியாக மகள் பிறந்ததால் தந்தை குடும்பத்தை விட்டுச்சென்று விட்டார். இதனால் தனி நபராக திவ்யாவை வளர்த்தார் தாய் பத்மாவதி.

சொந்த ஊரான பெருங்கோழி அரசுப் பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்தார் திவ்யா. மேல்நிலைக் கல்விக்காக உத்திரமேரூர் வந்த அவர், அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

எந்தக் காரணத்துக்காகவும் மகளின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த பத்மாவதி, கடந்த 12 ஆண்டுகளாக மகளை இடுப்பில் சுமந்து பள்ளிக்கு அழைத்து வருகிறார். சுமார் 2 கி.மீ. மகளைச் சுமந்துவந்து அரசுப் பேருந்தில் பயணிக்கும் பத்மாவதி, மீண்டும் 1 கி.மீ. தூரம் மகளை சுமந்தவாறே பள்ளிக்கு நடந்து செல்கிறார்.

மாற்றுத்திறனாளி மகளை 12 ஆண்டுகளாக தினந்தோறும் சுமார் 6 கி.மீ. தூரம், பள்ளிக்கு இடுப்பில் சுமந்து செல்லும் தாய் குறித்த செய்திகள் 'இந்து தமிழ்' உட்பட ஊடகங்களில் கடந்த வாரம் வெளியாகின. இதை அறிந்த முதல்வர் பழனிசாமி, தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் இரு சக்கர வாகனத்தை வழங்கியுள்ளார்.

இதற்கிடையில் செங்கல்பட்டு மாவட்டத் தொடக்க விழாவில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி, மாணவி திவ்யாவுக்கு மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் இரு சக்கர வாகனத்தை வழங்கினார். உலகமெங்கும் வாழும் தமிழர்கள், திவ்யாவின் நிலை அறிந்து அவரின் படிப்புக்கு உதவ முன் வந்துள்ளதாக அவரின் தாய் பத்மாவதி நன்றி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x