Published : 29 Nov 2019 07:20 AM
Last Updated : 29 Nov 2019 07:20 AM

ஐஐடி நுழைவுத் தேர்வை 2021 ஜனவரி முதல் தமிழில் எழுதலாம்

கோப்புப்படம்

புதுடெல்லி

இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐஐடி), தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (என்ஐடி) உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க ஜெ.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வுகளை வெல்ல வேண்டும்.

முதன்மைத் தேர்வு, அட்வான்ஸ்ட் தேர்வு என்று இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் ஜெ.இ.இ. தேர்வில் முதன்மைத் தேர்வை இனி தமிழிலும் எழுதலாம் என்ற செய்தி மனித வள மேம்பாட்டு துறை அமைச்சக வட்டாரத்தில் இருந்து தெரியவந்துள்ளது. 2021 ஜனவரி முதல் ஜெ.இ.இ. முதன்மைத் தேர்வில் தமிழ்வழித் தேர்வு நடைமுறைக்கு வருகிறது.
ஐ.ஐ.டி. கூட்டு நுழைவுத் தேர்வுகளை 11 மாநில மொழிகளில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஐ.ஐ.டி கூட்டு நுழைவுத் தேர்வுகள் இதுவரை ஆங்கிலம், இந்தி, குஜராத்தி ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. நீட் தேர்வுகளைப் போலவே முக்கிய மாநில மொழிகளிலும் இத்தேர்வுகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகளைத் தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது, வங்க மொழி, ஒரியா, அஸ்ஸாமி, மராத்தி ஆகிய 8 மாநில மொழிகளிலும் இத்தேர்வுகளை நடத்தும்படி தேசிய தேர்வு முகமைக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆணையிட்டு இருக்கிறது. இந்த மொழிகளையும் சேர்த்து 10 மாநில மொழிகள், ஆங்கிலம் என மொத்தம் 11 மொழிகளில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x