Published : 28 Nov 2019 11:20 AM
Last Updated : 28 Nov 2019 11:20 AM
கனமழை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இன்று நடத்தப்படுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிமரமடைந்து வருகிறது. காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. இந்நிலையில் அங்கு செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்தனர்.
அதேபோல வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தும் டிசம்பர் 3-ம் தேதி நடைபெறும் என்று துணைவேந்தர் அறிவித்துள்ளார்.
வேலூர், காஞ்சிபுரத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று துணைவேந்தர் துரைசாமி கூறியுள்ளார்.
அண்ணா பல்கலை. தேர்வுகள் நடக்கும்
எனினும் கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT