Published : 28 Nov 2019 07:44 AM
Last Updated : 28 Nov 2019 07:44 AM
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு(எப்ஐசிசிஐ) சார்பில் நடத்தப்பட்ட 'உயர்கல்வி உச்சி மாநாடு' புதுடெல்லியில் உள்ள விஜியன் பவனில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இந்த உச்சி மாநாட்டில், 65 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினராக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: எதிர்கால இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்து, நமது கல்வி முறையை நாம் மறுசீரமைக்க வேண்டும். அதேநேரத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு சமமான முக்கியத்துவத்தை கலைக் கல்வியும் பெற வேண்டும். நமது நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் இடைநிலை கல்வி அணுகு முறையில் முன்னேற்றம் அடைந்துள்ளன.
கணிதத்துடன் இசை மற்றும் செயற்கை நுண்ணறிவு சேர்த்து கால்நடை வளர்ப்புடன் இணைத்துள்ள நமது பல்கலைக்கழகங்களால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், அதில் இன்னும் நாம் கவனம் செலுத்த வேண்டும். பாடத்திட்டத்தில் கல்வியில் மாற்றங்கள் நிகழவேண்டும்.
நாளைய உலகம் இயந்திர நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் பாதைகளால் தான் இயக்கப்படும். இந்த மாற்றத்திற்கு நம்மை தயார்படுத்து வதற்கும், அதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும், நமது உயர் கல்வியில் புதிய படிப்புகளை கொண்டுவரவேண்டும். அப்போது தான் பிற நாடுகளுடன் போட்டி போட முடியும். உயர்கல்வியை ஆழமாக ஆராய்ச்சி செய்து மறுசீரமைக்க வேண்டும். கருத்து, புதுமை ஆகியவை நமது பாடத்திட்டத்தில் முதன்மையாக வழங்க வேண்டும். இவ்வாறு ராம்நாத் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT