Published : 27 Nov 2019 02:39 PM
Last Updated : 27 Nov 2019 02:39 PM

மேற்படிப்புக்காக இந்தியா வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேற்படிப்புக்காக இந்தியா வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

இதுதொடர்பான மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ''உலகம் முழுவதிலும் 164 நாடுகளில் இருந்து வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா வருகின்றனர். நேபாளத்தில் இருந்து அதிக அளவிலான மாணவர்கள் படிப்புக்காக இந்தியா வருகின்றனர். அடுத்தபடியாக வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா வரும் பட்டியலில் ஆப்கானிஸ்தான் இடம் பிடித்துள்ளது.

மாணவிகளை விட மாணவர்களே அதிகளவில் இந்தியாவுக்குப் படிக்க வருகின்றனர். இதில் பி.டெக் படிப்பைத் தேர்ந்தெடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இரண்டாவதாக பிபிஏ படிப்பை மாணவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.

2018- 19 ஆம் கல்வியாண்டில் 47,427 பேர் மேற்படிப்புக்காக இந்தியா வந்துள்ளனர். இதுவே கடந்த ஆண்டில் படிக்க வந்த வெளிநாட்டவரின் எண்ணிக்கை 46,144 ஆக இருந்துள்ளது.

வெளிநாட்டினர் கர்நாடக மாநிலத்துக்கே அதிக அளவில் (10,023) படிக்க வந்துள்ளனர். இது மகாராஷ்டிரத்தில் 5,003 பேராகவும் பஞ்சாப்பில் 4,533 பேராகவும் உள்ளது. தமிழகத்தில் 4,101 வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர்.

நேபாளத்தில் இருந்து 26.88 சதவீத மாணவர்கள் இந்தியாவில் படிக்கின்றனர். அமெரிக்காவில் இருந்து 3.2% பேரும் ஈரானில் இருந்து 2.38% மாணவர்களும் மேற்படிப்புக்காக இந்தியா வந்துள்ளனர்''

இவ்வாறு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்ட மேற்படிப்புக்கான தேசிய அளவிலான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x