Published : 27 Nov 2019 06:42 AM
Last Updated : 27 Nov 2019 06:42 AM
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத் துணைவேந்தராக என்.பஞ்சநாதம் என்ற பேராசிரியரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப் பல்கலைக்கழகத்தின் கீழ் 600 கல்வியியல் கல்லூரிகள் செயல் பட்டு வருகின்றன.
இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ஜி.தங்கசாமி கடந்த பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தகுதியானவர்களை தேர்வு செய்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைத்தது.
இதையடுத்து, தகுதியானவர் கள் பட்டியலில் உள்ளவர்களிடம் ஆளுநர் நேர்காணல் நடத்தி, அதில் இருந்து என்.பஞ்சநாதம் என்ற பேராசிரியரை தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்த ராக நியமித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கற்பித்தல் பணியில் 29 ஆண்டு கள் சிறப்பான அனுபவம் கொண்ட பஞ்சநாதம், சர்வதேச அளவில் 84 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். 33 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். 5 புத்தகங்கள் எழுதியுள்ளார்.
ஆய்வுத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட இவர், 12 ஆண்டுகள் நிர்வாகப் பணி அனுபவத்தையும், சர்வதேச அளவில் கல்வியியல் அனுபவத்தையும் பெற்றவர். கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி தொடர்பாக 35 நாடுகளில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு சென்று வந்தவர்.
மும்பை ஐஐடி கடந்த 2017-ல் இவருக்கு தகைசால் பேராசிரியர் விருது வழங்கியது. இந்திய மேலாண்மை ஆராய்ச்சியாளர்கள் சங்கம் சார்பில் 2018-ல் சிறந்த ஆய்வு நெறியாளருக்கான விருதையும் பெற்றவர்.
தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகாலம் பஞ்சநாதம் இப் பதவியில் இருப்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT