Published : 26 Nov 2019 05:06 PM
Last Updated : 26 Nov 2019 05:06 PM
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்து குழு சிறப்புப் பயிற்சி அளித்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பாடத்திட்டம், தேர்வு முறை உட்பட கற்றல் பணிகளில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் செயலர் பிரதீப் யாதவ் தலைமையிலான கல்விக்குழு பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி புறப்பட்டுச் சென்றது. அத்துடன் பின்லாந்து நாட்டின் ஜோன்சு ஹெய்னாபுரோடு நகரத்தில் உள்ள லிலுன்லாட்டி மழலையர் பள்ளியை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார்.
அந்தப் பள்ளியில் பின்பற்றப்படும் கல்வி முறை, கற்றல் உபகரணங்கள், மாணவர்கள் கற்றல் திறன் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ததுடன், பள்ளி முதல்வருடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில் பின்லாந்தில் இருந்து 6 பேர் கொண்ட குழு இந்தியா வந்துள்ளது. சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சியை ஆணையர் சிஜி தாமஸ் தொடங்கி வைத்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்தில் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விளைவாக பின்லாந்து பயோ அகாடமி குழுவினர் இங்கு வந்துள்ளனர். சென்னையில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளைப் பார்வையிட்ட பின்னர் கற்றல் முறையை மேம்படுத்துவது, பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.
இந்தப் பயிற்சி சுமார் 100-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது'' என்று சிஜி தாமஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT