Published : 26 Nov 2019 11:02 AM
Last Updated : 26 Nov 2019 11:02 AM

12-ம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தைப் படித்தாலே நீட் தேர்வை எதிர்கொள்ளலாம்: அமைச்சர் செங்கோட்டையன்

12-ம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தைப் படித்தாலே நீட் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எழுத முடியும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ''பல ஆண்டுகளுக்குப் பிறகு பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவே வியக்கத்தக்க அளவுக்கு புதிய பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ கல்வி முறையைப் பின்பற்றும் கல்வி நிறுவனங்களே நமது பாடத் திட்டத்தைப் பார்த்து அச்சப்படுகின்றன.

12-ம் வகுப்புக்கும் புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதைப் படித்தாலே போதும். நீட் தேர்வாக இருந்தாலும் சரி, ஐஐடி நுழைவுத் தேர்வு, ஜேஇஇ என எந்தத் தேர்வாக இருந்தாலும் சரி, எளிதாக எழுதலாம்.

12-ம் வகுப்புப் பாடத் திட்டத்தை முழுமையாகப் படித்து முடித்தால், தேர்வுகளுக்காக கேள்வி- பதில்கள் அதில் இருப்பதை அறியலாம். வரும் கல்வியாண்டில் பள்ளிகள் தொடங்கிய ஒரு மாதத்துக்குள், மாணவர்களுக்கு சீருடையும் மடிக்கணினியும் வழங்கப்படும்'' என்று தெரிவித்தார்.

நீட் தேர்வில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் பின்தங்கியுள்ள நிலையில், வசதியும் வாய்ப்பும் கொண்ட மாணவர்கள் பயிற்சி மையங்களுக்குச் சென்று, நீட் தேர்வை எதிர்கொள்ளப் பயிற்சி எடுத்துக்கொள்கின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன், 12-ம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தைப் படித்தாலே நீட் தேர்வை எதிர்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x