Published : 26 Nov 2019 08:49 AM
Last Updated : 26 Nov 2019 08:49 AM
புதுச்சேரி
மாதம் ஒரு முறை அரசுப் பள்ளி கழிவறையை தூய்மை செய்யும் பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார் புதுச்சேரி தேசிய நல்லாசிரியர் சசிக்குமார்.
புதுச்சேரி திருக்கனூர் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் இயங்கி வருகிறது பாவேந்தர் பாரதிதாசன் அரசு தொடக்கப்பள்ளி. பாவேந்தர் பாரதிதாசன் ஆரம்ப காலத்தில் இப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். இப்பள்ளியில் எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை 490 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். 16 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இப்பள்ளி ஆசிரியர் சசிகுமார் நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். இப்பள்ளியின் பொறுப்பு தலைமை யாசிரியராகவும் உள்ளார்.
இப்பள்ளி கடந்தாண்டு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை வழங்கும் "தூய்மைப் பள்ளி" (ஸ்வச் வித்யாலயா) விருதை பெற்றது. தேசிய அளவில் இப்பிரிவில் 100 சத புள்ளி பெற்று முதலிடம் பிடித்தது. இதற்கு முக்கியக் காரணம் இப்பள்ளியின் கழிவறை நட்சத்திர விடுதியில் உள்ளதைப்போல் தூய்மையாக இருக்கும். இங்குள்ள கழிவறையை பணியாளர்கள் பராமரித்தாலும் மாதம் ஒரு முறை இதனை தூய்மை செய்து பராமரித்து வருகிறார் ஆசிரியர் சசிக்குமார்.
இதுதொடர்பாக 'இந்து தமிழ்' நாளிதழிடம் அவர் கூறும்போது, "கழிவறை தூய்மையாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகளவில் எங்களுக்கும், மாணவர்களுக்கும் உண்டு. கழிவறை சென்றால் சரியாக தண்ணீர் ஊற்றுவது, அதனை பயன்படுத்திய பிறகு கைகழுவது என்ற பழக்கங்களையும் மாணவர்கள் கற்றுள்ளனர். கழிவறையை தூய்மையாக பராமரிக்கிறோம். எனினும் மாதம் ஒரு முறை கழிவறை, அதன் சுற்றுச்சுவர், கண்ணாடி பகுதி என அனைத்தையும் முழுமையாக தூய்மை செய்து துடைத்து வைப்பது எனது வழக்கம். பல ஆண்டுகளாக இதனை செய்து வருகிறேன்" என்கிறார் இயல்பாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT