Published : 23 Nov 2019 05:49 PM
Last Updated : 23 Nov 2019 05:49 PM
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தனியார் பள்ளியில் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நீச்சல் போட்டியை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் குடியரசு தின, பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று (சனிக்கிழமை) தேவகோட்டை, காரைக்குடி பள்ளிகளில் ரோடு சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக், நீச்சல், டென்னிகாய்ட் ஆகிய போட்டிகள் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தன.
இதில் நீச்சல் போட்டி காரைக்குடி தி லீடர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 முதல் பகல் 1 மணி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அப்பள்ளிக்கு வந்தனர். ஆனால் திடீரென அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி போட்டியை அதிகாரிகள் ரத்து செய்தனர். இதனால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், ‘ மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து குழந்தைகளை அழைத்து வந்தோம். காலை 8 மணிக்கே வந்துவிட்டோம்.
பல மணி நேரம் காத்திருந்தபிறகு, நீச்சல் குளத்தை தர பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டதாக கூறி, போட்டியை திடீரென ரத்து செய்துவிட்டனர். கல்வித்துறை அதிகாரிகள் முறையாக அனுமதி பெற்றபிறகே, போட்டிக்கு அழைத்திருக்க வேண்டும், என்று கூறினர்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சூரன் கூறுகையில், ‘எதிர்பாரத காரணங்களால் போட்டி நடத்த முடியவில்லை. நவ.24-ம் தேதி (இன்று) சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் போட்டி நடத்தப்படும்,’ என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT