Published : 22 Nov 2019 12:22 PM
Last Updated : 22 Nov 2019 12:22 PM

மாற்றுத்திறனாளி மகள்: 12 ஆண்டுகளாக பள்ளிக்கு இடுப்பில் சுமந்து செல்லும் தாய்!

மாற்றுத்திறனாளியான மகளின் படிப்பு பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அவரின் தாய் 12 ஆண்டுகளாக அவரைப் பள்ளிக்குச் சுமந்து செல்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம், பெருங்கோழி பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி. அவரின் ஒரே மகள் திவ்யா. பிறக்கும்போதே கால்களில் குறைபாட்டுடன் பிறந்தார் திவ்யா. மாற்றுத்திறனாளியாக மகள் பிறந்ததால் தந்தை குடும்பத்தை விட்டுச்சென்று விட்டார். இதனால் தனி நபராக திவ்யாவை வளர்த்தார் தாய் பத்மாவதி.

சொந்த ஊரான பெருங்கோழி அரசுப் பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்தார் திவ்யா. மேல்நிலைக் கல்விக்காக உத்திரமேரூர் வந்த அவர், அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

எந்தக் காரணத்துக்காகவும் மகளின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பத்மாவதி, கடந்த 12 ஆண்டுகளாக மகளை இடுப்பில் சுமந்து பள்ளிக்கு அழைத்து வருகிறார். சுமார் 2 கி.மீ. மகளைச் சுமந்துவந்து அரசுப் பேருந்தில் பயணிக்கும் பத்மாவதி, மீண்டும் 1 கி.மீ. தூரம் மகளை சுமந்தவாறே பள்ளிக்கு நடந்து செல்கிறார்.

இதுகுறித்துப் பேசும் அவர், ''காலையில் 5 மணிக்கு எழுவேன். வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, திவ்யாவைத் தயார் செய்வேன். நானும் கிளம்பிய பின் மகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வேன். நாள் முழுவதும் அவளுடனேயே இருந்து தேவைகளைக் கவனித்துக் கொள்வேன். மீண்டும் மாலையில் மகளை வீட்டுக்கு அழைத்துச் செல்வேன்'' என்கிறார்.

என்னை மட்டுமே கவனித்துக்கொள்வதால், தாயால் வருமானம் ஈட்ட முடியவில்லை என்று வேதனைப்படுகிறார் மகள் திவ்யா. அவர் பேசும்போது, ''நான் நன்றாகப் படித்து வேலைக்குச் செல்வேன். இதன் மூலமாக என்னை மாதிரி சிரமப்படுபவர்கள் எல்லோருக்கும் உதவுவேன். நாள் முழுவதும் அம்மா என்னுடனே இருப்பதால், வீட்டுச்சூழல் சிரமமாக இருக்கிறது. என் மேற்படிப்புக்கு முதல்வர் உதவ வேண்டும்'' என்கிறார் திவ்யா.

கருவாய் மகளை 10 மாதங்கள் சுமந்த தாய், கல்விக்காக 12 ஆண்டுகளாகச் சுமப்பது அங்குள்ள மக்களின் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x