Published : 22 Nov 2019 08:53 AM
Last Updated : 22 Nov 2019 08:53 AM

அக்கம் பக்கம் பார்ப்போம்!

சென்னையில் உள்ள எழும்பூர் அரசு கண் மருத்துவமனையை பார்வையிட தமிழகம் எங்கும் மருத்துவம் படித்து வரும் மாணவர்களை அழைத்து வரலாம் என்று தமிழக சுகாதாரத் துறை முடிவெடுத்துள்ளது. என்ன விசேஷம்?

எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு தற்போது 200 வயதாகிறது. இதுவே உலகின் இரண்டாவது பழமை வாய்ந்த கண் மருத்துவமனை.

இந்த மருத்துவமனை கட்டடத்துக்குள் இரு நூற்றாண்டு கண்ட எலியட் பள்ளியும் புதுப்பிக்கப்பட்ட மருத்துவ அருங்
காட்சியகமும் உள்ளன. அங்கு பழங்கால மருத்துவ கருவிகள், மருத்துவ குறிப்புகள், முப்பரிமாணத்தில் வடிவமைக்கப்பட்ட கண் சோதனை கூடம் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மருத்துவக் கல்வியில் தமிழகத்தின் செழுமையான பாரம்பரியத்தை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு உணர்த்தவே இந்த திட்டம்.

ஈபிள் கோபுரம் எங்கே உள்ளது? என்று கேட்டால் நூற்றுக்கு தொண்ணூறு பேர் சரியான பதிலைச் சொல்லிவிடுவோம். ஆனால், தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் உலகின் இரண்டாவது பழமை வாய்ந்த கண் மருத்துவமனை இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அவ்வளவு ஏன் நம்முடைய சொந்த ஊரில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை நாம் அறிந்து வைத்திருக்கிறோமா?

வெறும் பழம்பெருமை பேசி அரட்டை அடிக்கச் சொல்லவில்லை. நம்மைச் சுற்றி உள்ளவற்றின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொண்டால்தான் நம் சுயத்தை அறிந்து கொள்ள முடியும். இந்தியாவில் தனிநபர்கள் வளர்ச்சி அடைகிறார்கள். ஆனால், ஒட்டுமொத்த சமூகம் வளர்ச்சிப் பாதையில் நடைபோட முடியாததற்கு இதுவும் ஒரு காரணம்.

இன்றும் பெரும்பாலான மாணவர்களிடம், நீ என்னவாக ஆசைப்படுகிறாய்? என்று கேட்டால், உடனடியாக வரும் பதில், மருத்துவர் அல்லது கலெக்டர் ஆகணும் என்பதே. உங்களுக்கு தெரியுமா! குடிமைப் பணிக்கான நேர்முகத் தேர்வில் கட்டாயம் இடம்பெறும் கேள்வி, உங்களுடைய ஊரின் வரலாற்றுச் சிறப்பு என்ன? இந்த கேள்விக்கான பதிலைப் புத்தகங்களில் தேடுவதற்கு முன்னால் அக்கம் பக்கம் பார்க்கத் தொடங்குங்கள் மாணவர்களே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x