Published : 22 Nov 2019 07:48 AM
Last Updated : 22 Nov 2019 07:48 AM

செய்திகள் சில வரிகளில்: தண்ணீரை அடிப்படை உரிமையாக்கும் திட்டம்-  அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி

நாடாளுமன்ற மக்களவையில் பாஜக உறுப்பினர் ஹேமமாலினி எழுப்பிய கேள்விக்கு மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் நேற்று பதில் அளிக்கையில் கூறியதாவது:

தண்ணீருக்கான உரிமையை அடிப்படை உரிமையாக மாற்றுவது தொடர்பாக அரசின் பரிசீலனையில் இல்லை. எனினும் ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்துக்கும் குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

இவ்வாறு ஷெகாவத் கூறினார்.

மற்றொரு கேள்விக்கு ஷெகாவத் பதில் அளிக்கும்போது, “ஆறுகளை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பதற்காக இமய மலை பகுதியில் 14 இணைப்புகள் மற்றும் தீபகற்ப பகுதியில் 16 இணைப்புகளை தேசிய தண்ணீர் மேம்பாட்டு முகமை அடையாளம் கண்டுள்ளது” என்றார்.

அமெரிக்காவில் விவேகானந்தா யோகா பல்கலை.

வாஷிங்டன்

தமிழகத்தின் நாக்கோவிலில், ‘விவேகானந்தா யோகா அனுசந்தனா சமஸ்தானா’ என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் சார்பில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ‘விவேகானந்தா யோகா பல்கலைக்கழகம்’ விரைவில் தொடங்கப்படும் என்று யோகா குரு எச்.ஆர்.நாகேந்திரா நேற்று தெரிவித்தார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு வாஷிங்டனில் ‘மனிதநேயத்துக்கு இந்தியா’ என்ற தலைப்பில் இந்திய தூதரகத்தின் சார்பில் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற யோகா குரு நாகேந்திரா இத்தகவலை வெளியிட்டார்.

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ம் தேதி உலக யோகா தினமாகக் கொண்டாட ஐ.நா. அறிவித்தது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x