Published : 22 Nov 2019 10:19 AM
Last Updated : 22 Nov 2019 10:19 AM

வரும் கல்வி ஆண்டு முதல் 6 முதல் 10-ம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா ஷூ, சாக்ஸ்: 28 லட்சத்து 64 ஆயிரம் பேர் பயன்பெறுவர்

சென்னை

வரும் கல்வி ஆண்டு (2020-2021) முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10-ம்வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஷூ மற்றும் சாக்ஸ் வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ரூ.66 கோடியே 71 லட்சம் செலவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள இந்த புதிய திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 28 லட்சத்து 64 ஆயிரத்து 885 மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள்.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகம், நோட்டு, புத்தகப்பை, சீருடை, ஜியாமெட்ரி பாக்ஸ், காலணி, மடிக் கணினி, சைக்கிள், பஸ் பாஸ் என 14 விதமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு (2020-2021) முதல் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலணிக்குப் பதிலாக ஷூ மற்றும் சாக்ஸ் வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10-ம்வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா காலணிகள் வழங்கும் திட்டம் 2012-2013 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வழங்கப்பட்டு வரும் காலணிக்குப் பதிலாக 2020-2021-ம் கல்வி ஆண்டு முதல் ஷூ மற்றும் சாக்ஸ் ஆகியவை ரூ.10 கோடி செலவில் வழங்கப்படும். இதன்மூலம் 28 லட்சத்து 64 ஆயிரத்து 885 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர் என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.

அவரது அறிவிப்பை தொடர்ந்து, இந்த திட்டம் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் அரசுக்கு அளித்த கருத்துருக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம்வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் காலணிக்குப் பதிலாக 2020-2021-ம் கல்வி ஆண்டு முதல் ஷூ மற்றும் சாக்ஸ் வழங்கப்படும்.

இதற்கு ரூ.66 கோடியே 71 லட்சத்து92 ஆயிரத்து 316 வழங்க நிர்வாக ஒப்புதல் அளித்து அரசு ஆணையிடுகிறது.

இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "காலணிகளைப் போன்று முதலில் மாணவர்கள் கால்களின் பாதம் அளவெடுக்கப்பட்டு ஷூ தயாரிக்கப்படும். அதன்படி வரும் கல்வி ஆண்டு முதல் 6 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஷூ, சாக்ஸ் வழங்கப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x