Published : 20 Nov 2019 07:54 AM
Last Updated : 20 Nov 2019 07:54 AM
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரத்தில் போக்குவரத்து காவலராகவேலை பார்த்து வருகிறார் ரஞ்சித் சிங். இவர் பிரபல பாடகர் மைக்கேல் ஜாக்சன் போன்று நடனமாடியே (மூன் வாக்) போக்குவரத்தை சரிசெய்வார். ரஞ்சித்தின் செயல் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது.
அவரை போன்று சாலை விதிகள் பற்றி விழிப்புணர்வு செய்து வருகிறார், 23 வயதான எம்பிஏ மாணவி சுபி ஜெயின்.
புனேவில் எம்பிஏ படிக்கும் மாணவி, 15 நாட்கள் இன்டர்ன்ஷிப் செய்ய மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்துக்கு வந்தார். அப்போது பினா பகுதியில், சாலை விதிகளை மீறும் நபர்களை கண்டு,அவர்களை திருத்தும் நோக்கத்தில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர்களிடம் ஹெல்மெட் அணியுங்கள் என்றும் காரில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் போடுங்கள் என்றும், மஞ்சள் கோட்டை கடக்காதீர்கள் என்றும் நடனம் மூலம் அறிவுரை வழங்கும், வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இவரின் தனித்துவமான செயலுக்காக இந்தூர் வட்டத்தின் போலீஸ் அதிகாரியான வருண் கபூர் உட்பட பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இதுகுறித்து சுபி கூறுகையில்,“எனக்கு போக்குவரத்தை சரிசெய்ய எந்த அனுபவமும் கிடையாது. நான் இந்தூருக்கு ஒரு முறை வந்தபோது, அங்கு ஒரு தன்னார்வ இளைஞர் ஒருவர் (ரஞ்சித் சிங்) அருமையாக போக்குவரத்தை சரிசெய்தார். அவரின் செயல் என்னை ஈர்த்தது. அவரை போலவே, சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த, நடனம்ஆடினேன்.
இந்தூர், சாலை விதிகளை பின்பற்றினால் சுத்தமான முதல் நகரம் போல போக்குவரத்திலும் முதலிடத்தில் வரலாம்” என்றார். மாணவர்களே நாமும், மாணவி சுபி போல் செய்ய முடியாவிட்டாலும், நமது உறவினர்களிடமாவது சாலை விதிகளை பற்றி விழிப்புணர்வு செய்வோமா...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT