Published : 19 Nov 2019 05:40 PM
Last Updated : 19 Nov 2019 05:40 PM
ஐஐடி வளாகங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு பதில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை இடம் மாற்றும் விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து முடிவெடுக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம், ஐஐடி வளாகங்களில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்குப் பதிலாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை இடம் பெறச் செய்வதற்கான அறிவிப்பை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை என்று கூறி ஐஐடி மண்டி (இமாச்சலப் பிரதேசம்) முன்னாள் ஊழியரும் சமூக ஆர்வலருமான சுஜித் ஸ்வாமி என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அண்மையில் மனு தொடர்ந்தார்.
மேலும் தனியார் அல்லது தனியார் பங்களிப்புடன் ஐஐடி வளாகத்தில் இயங்கும் பள்ளிகளால் ஏற்பட்ட இழப்பை மதிப்பீடு செய்ய வேண்டும். அத்துடன் தங்களின் வளாகத்தில் தனியார் பள்ளிகளை அனுமதித்ததற்காக ஐஐடிக்களிடம் சந்தை மதிப்பிலான வருவாய் இழப்பை வசூலிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இது தொடர்பாக தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி ஹரி சங்கர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அத்துடன் ஐஐடி வளாகங்களில் உள்ள தனியார் பள்ளிக்கு பதில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை இடம் மாற்றும் விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT