Last Updated : 19 Nov, 2019 11:20 AM

 

Published : 19 Nov 2019 11:20 AM
Last Updated : 19 Nov 2019 11:20 AM

'போகாதீங்க சார்'- மாறுதலான ஆசிரியரை அனுப்ப மறுத்து மாணவர்கள் பாசப் போராட்டம்; கண்ணீர் விட்ட ஆசிரியர்!

பொள்ளாச்சி

கிணத்துக்கடவில் ஆசிரியர் ஒருவர் பணி மாறுதல் பெற்றுச் சென்றதை ஏற்காத மாணவர்கள், அவரை அனுப்ப மறுத்துக் கதறி அழுத நிகழ்வு ஆசிரியர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியத்தில் வடசித்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. அங்கு கடந்த 25 ஆண்டுகளாக பட்டதாரி கணித ஆசிரியராக செந்தில்குமார் என்னும் ஆசிரியர் பணியாற்றி வந்தார். அவருக்கு வணிகவியல் முதுகலை ஆசிரியராகப் பதவி உயர்வு கிடைத்தது. இந்நிலையில் ஆசிரியர் செந்தில்குமார் நேற்று (திங்கட்கிழமை) தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பணி மாறுதல் ஆகிச் செல்ல இருந்தார்.

இது குறித்துத் தகவல் அறிந்த பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் பெருத்த சோகம் அடைந்தனர். சிறந்த ஆசிரியரான செந்தில்குமார் எங்கள் பள்ளியை விட்டு மாறுதலாகி வேறு பள்ளிக்குச் செல்லக்கூடாது எனக் கூறி, வேண்டுகோள் விடுத்தனர்.

பள்ளிக்கு வந்த அவரை மாணவர்கள் சூழ்ந்துகொண்டு 'சார், போகாதீங்க சார், நீங்க எங்களுக்கு வேணும் சார்' என்று கதறி அழுதனர். பள்ளியை விட்டுச் செல்ல வேண்டாம் என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர். மாணவர்களை ஆறுதல் படுத்திவிட்டு, பள்ளியில் இருந்த ஆசிரியர் செந்தில்குமார் வெளியே செல்ல முயன்றார். அப்போது அங்கிருந்த மாணவிகளும் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர்.

இதைப் பார்த்த ஆசிரியர் செந்தில்குமாரும் செய்வதறியாது கண்ணீர் விட்டு அழுதார். ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே நடந்த நெகிழ்ச்சி மிகுந்த பாசப் போராட்டத்தைக் கண்ட பெற்றோர்களும், பிற ஆசிரியர்களும் கண்கலங்கினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x