Published : 19 Nov 2019 08:08 AM
Last Updated : 19 Nov 2019 08:08 AM

காற்று மாசு காரணிகளை குறைக்க சாலையோர ஓட்டல்களுக்கு காஸ் அடுப்பு: மேற்கு வங்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு

தலைநகர் டெல்லியில் மிகப்பெரிய காற்று மாசு பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் காற்று மாசு குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தங்கள் மாநிலத்தில் காற்று மாசு வந்துவிடக்கூடாது என்று பல முன்னேற் பாடுகளை மாநில அரசுகள் செய்து வருகின்றன.

அந்த வரிசையில், மேற்கு வங்கத்தில் விறகு மற்றும் கரி அடுப்பு பயன்படுத்தும் சாலையோர ஓட்டல்களுக்கு காஸ் அடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மேற்கு வங்க மாசு கட்டுபாட்டு வாரியத்தின் செயலாளர் ராஜேஷ் குமார் கூறுகையில், “மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவின் நலன் குறித்து அண்மையில் ஒரு ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

காற்று மாசு ஏற்படுத்தும் வகையில், சாலையோரத்தில் உள்ள ஒட்டல்கள் விறகு அல்லது கரி அடுப்புகளை பயன்படுத்துகிறது. இதனை தடுக்கும் நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

அதன்படி, சாலையோர ஓட்டல்களுக்கு, சுற்றுச் சூழலுக்கு உகந்த காஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காஸ் திட்டத்துக்கு தேவையான உதவியை இந்தியன் ஆயில் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்திடம் கேட்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது விரைவில் நடை
முறைப்படுத்தப்படும். அதேநேரத்தில், திட எரிப்பொருட்களை உபயோகம் படுத்தும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

முன்னதாக, தடையை மீறி பிளாஸ்டிக் போன்ற குப்பைகளை எரித்து காற்று மாசு ஏற்படுத்தும் நபர்கள் மீது புகார் அளிக்க, மேற்கு வங்க அரசு ‘பரிபேஷ்’(சுற்றுச்சூழல்) என்ற செல்போன் செயலியை அண்மையில் வெளியிட்டது.

மேலும், பிளாஸ்டிக் கழிவு பொருட்களை கொண்டு கைவினை பொருட்கள் செய்பவர்களுக்கு சிறிய தொகையை அம்மாநில அரசு வழங்கு வது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x