Published : 19 Nov 2019 07:23 AM
Last Updated : 19 Nov 2019 07:23 AM
சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் கல்வெட்டியலில் மற்றும் தொல்லியலில் பட்டயப் படிப்பை நடத்துகிறது. இதில், 10-ம் வகுப்பு முடித்தவர்கள் சேரலாம்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
சென்னை தரமணியில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனம் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் அகழாய்வு தொடர்பான ஓராண்டு கால பட்டய படிப்பை (டிப்ளமா) வழங்குகிறது. 2020-2021-ம் கல்வி ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகள் ஜனவரி மாதம் தொடங்கப்பட உள்ளன.
இப்படிப்பில், கல்வெட்டியல், தொல்லியல், தமிழக வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்துகொள்வதற்கும், கல்வெட்டு படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்தலுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதில், 10-ம்வகுப்பு முடித்தவர்கள் சேரலாம். வயது வரம்பு ஏதும் கிடையாது.
இதற்கான பயிற்சி வகுப்புகள் சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் ஓராண்டு காலம் நடைபெறும். விண்ணப்ப படிவத்தை உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.ulakaththamizh.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பயிற்சிக்கான சேர்க்கைக் கட்டணம் ரூ.2,500. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 20-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். வகுப்புகள் ஜனவரி மாதம் தொடங்கும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் அறிய 044-22542992 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது 95000-12272 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT