Published : 18 Nov 2019 04:25 PM
Last Updated : 18 Nov 2019 04:25 PM

பில்கேட்ஸைச் சந்தித்துப் பேசிய பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்

மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸை, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் சந்தித்துப் பேசியுள்ளார். தலைநகர் பாட்னாவில் நேற்று இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இதில் பிஹாரின் கல்வி மற்றும் சுகாதாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் பின்தங்கி உள்ள மாநிலங்களில் பிஹாரும் ஒன்றாகக் கருதப்பட்டது. இந்நிலையில் நிதிஷ் குமார் மாநிலத்தை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் தொழிலதிபரும் தொழில்நுட்ப நிபுணருமான பில் கேட்ஸ்- நிதிஷ் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்துச் செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ள பில்கேட்ஸ், ''கடந்த 20 ஆண்டுகளில் பிஹாரை விட வறுமை மற்றும் நோய் ஒழிப்பு மற்றும் கல்வியில் சிறந்து விளங்கிய பகுதிகள் மிகச் சில மட்டுமே. 20 ஆண்டுகளுக்கு முன்னால் பிஹார் இருந்த சூழலுக்கும் இப்போது இருப்பதற்கும் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஒரு குழந்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றதை விட, இப்போது இரு மடங்கை விட அதிக வளங்களைப் பெறுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் அறங்காவலராகவும் இணைத் தலைவராகவும் பில்கேட்ஸ் உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத் இயக்கம்) திட்டத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தியமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு குளோபல் கோல்கீப்பர் எனும் விருதை பில்கேட்ஸ் அறக்கட்டளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x