Published : 18 Nov 2019 03:32 PM
Last Updated : 18 Nov 2019 03:32 PM
காலநிலை மாற்றம் குறித்து இந்தியப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு ஹரியாணா துணை முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா, அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''வளர்ந்து வரும் நாடுகள் சந்தித்து வரும் பிரச்சினைகளில் முக்கியமான ஒன்று காலநிலை மாற்றம். இது ஒவ்வொரு குடிமகனின் உடல் நலத்திலும் மோசமான தீங்கை ஏற்படுத்துகிறது. இதனால் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை அனைவரிடத்திலும் ஏற்படுத்த வேண்டும். இதற்கு கல்விப் பாடத்திட்டத்தில் காலநிலை மாற்றம் குறித்த பாடத்தைச் சேருங்கள்.
இத்தாலி நாடு, பள்ளிகளில் பருவநிலை மாற்றம் குறித்துக் கற்பிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்தக் கல்வியும் விழிப்புணர்வும் குழந்தைகளிடம் இருந்தே தொடங்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத் தலைமுறை, அதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளும்''.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மாதத்தில் பள்ளிகளில் காலநிலை மாற்றம் குறித்த பாடங்களை இத்தாலி அரசு கட்டாயமாக்கியது. இதுதொடர்பாக இத்தாலி கல்வித்துறை அமைச்சர் லோரன்சோ ஃபியராமண்டி கூறும்போது, ''நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் காலநிலை மாற்றம் குறித்த வகுப்புகள் கட்டாயமாக்கப்படும். பருவநிலை மாற்றத்தின் சவால்களைச் சுற்றியே அனைத்துப் பாடத்திட்டமும் அமையும் .
காலநிலை மாற்றம் குறித்த வகுப்புகளைக் கட்டாயமாக்கிய முதல் நாடு இத்தாலிதான். பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்து உயர்நிலைப் பள்ளி வரை அனைத்து மாணவர்களுக்கும் இதுகுறித்த பாடங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்'' என்று தெரிவித்திருந்தார்.
இமயமலையின் பனிப்பாறைகள் உருகி வருவதால் சென்னை, கொல்கத்தா, சூரத், மும்பை போன்ற நகரங்களில் கடல் மட்டம் உயர்ந்து மூழ்கக்கூடும் என்றும் மேலும் எதிர்காலத்தில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாத இடமாக மாறக் கூடும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் காலநிலை மாற்றம் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT