Published : 18 Nov 2019 11:41 AM
Last Updated : 18 Nov 2019 11:41 AM
கடுமையான காற்று மாசு காரணமாக, ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடவேண்டும் என்று டெல்லி பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் சுமார் 10 ஆயிரம் பெற்றோர்களிடம் லோக்கல்சர்வே என்னும் ஆன்லைன் நிறுவனம் ஆய்வை நடத்தியது. அதன்படி, டெல்லி, ஃபரிதாபாத், காஸியாபாத், நொய்டா, குர்கான் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பெற்றோர்களில் 74% பேர் அதீத காற்று மாசு ஏற்படும்போது பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் காலகட்டமான நவம்பர் 1 - 20 வரை விடுமுறை வேண்டும் என்று கோருகின்றனர்.
இது பள்ளியின் பாடத்திட்டத்தையும் செயல்பாடுகளையும் பாதிக்கும் என்று நிர்வாகத்தினர் நினைக்கக் கூடும். அந்த விடுமுறையை கோடைக்காலம், குளிர்காலம்,வசந்தகாலத்தில் விடப்படும் விடுமுறைகளில் இருந்து கழித்துக்கொள்ளுமாறு பள்ளிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
டெல்லியில் தீபாவளிக்குப் பின் காற்று மாசு கடுமையாக அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் வயல்களில் அறுவடை செய்த பின் மீதமிருக்கும் வைக்கோலை எரிப்பதால், கடுமையான புகைமூட்டம் டெல்லியைச் சூழ்ந்துள்ளது. இது தவிர வாகனங்கள் பெருக்கம், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மாசு ஆகியவற்றால் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆணையம் வரும் 5-ம் தேதி வரை டெல்லி மற்றும் என்சிஆர் மண்டலத்தில் கட்டிடப் பணிகளில் ஈடுபடத் தடை விதித்தது. பள்ளிகளுக்கும் 8-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டது.
காற்று மாசு சற்றே குறைந்ததை அடுத்து 6-ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட்டன. எனினும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆணையத்தின் அறிக்கைப்படி, காற்று மாசு மீண்டும் நெருக்கடி நிலையைத் தொட்டது. இதற்கிடையே கடந்த 15-ம் தேதி காற்று மாசு மிக மோசமான நிலையை தொட்டது. உலகிலேயே மிக மோசமான காற்று மாசு நகரம் என்ற நிலையையும் டெல்லி எட்டியது.
இதற்கிடையே நவ.20 ஆம் தேதிக்குப் பிறகு காற்று மாசு இன்னும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT