Published : 18 Nov 2019 10:19 AM
Last Updated : 18 Nov 2019 10:19 AM

அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்: மாணவர்களுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி அறிவுரை

மாணவர்கள் தங்கள் அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி வலியுறுத்தினார்.

புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை சார்பில் காரைக்கால் கோயில்பத்து அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் 3 நாட்கள் நடத்தப்பட்ட மண்டலஅறிவியல் கண்காட்சியின் நிறைவுநாள் விழா நடைபெற்றது. இக்கண்காட்சியில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 167 அரசு, அரசு உதவிபெறும், தனியார் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும்ஆசிரியர்களின் 223 படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

நிறைவு விழாவில் புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி சிறப்புஅழைப்பாளராகக் கலந்துகொண்டு சிறந்த அறிவியல் படைப்புகளை உருவாக்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் அவர் பேசும்போது, "மாணவர்களின் அறிவியல் சிந்தனைகளை தூண்டும் வகையில் இதுபோன்ற கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களின் அறிவியல் முயற்சிகளுக்கு அரசு துணை நிற்கும்" என்றார்.

தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என ஒவ்வொரு பிரிவிலும் தலா 5 சிறந்த படைப்புகள் தேர்வுசெய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்களின் படைப்புகளில் 3 சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. இதில் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் நவ.21-ம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வித் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், நல அமைச்சர் எம்.கந்தசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன், மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ராந்த் ராஜா, புதுச்சேரி மேம்பாட்டு ஆணையர் அன்பரசு, பள்ளி கல்வித் துறை இயக்குநர் பி.டி.ருத்ர கவுட, முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.அல்லி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டுச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x