Last Updated : 16 Nov, 2019 11:11 AM

 

Published : 16 Nov 2019 11:11 AM
Last Updated : 16 Nov 2019 11:11 AM

அபாய நிலையில் காற்று மாசு: பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு விடுமுறை- செயற்கை மழை பொழியவைக்க அரசு திட்டம்

பாகிஸ்தானில் காற்று மாசு அதிகரித்து அபாய நிலையை எட்டியதால், அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாசுபாட்டைக் குறைக்க செயற்கை மழையைப் பொழியவைக்க அரசு திட்டமிட்டு வருகிறது.

இதுகுறித்து பஞ்சாப் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''அடர்த்தியான புகை காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. லாகூர், ஃபைசாலாபாத் மற்றும் குஜ்ரன்வாலா மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரமான லாகூரில் 1.1 கோடி மக்கள் வசிக்கின்றனர். மாகாணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் தங்கள் பயிர்களின் மிச்சங்களை எரித்ததால், கடந்த சில நாட்களாக கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளது.

இதனால் லாகூர் முழுவதும் அடர்த்தியான புகை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல், பயிர்கள் எரிப்பு, தொடர்ச்சியாக மரங்களை வெட்டுவது ஆகியவை காற்று மாசுபாட்டுக்கான முக்கியக் காரணிகளாக அமைந்துள்ளன. கடந்த வியாழக்கிழமை அன்று பெய்த சிறு மழையால், லாகூர் முழுவதும் அடர்த்தியான புகை பரவியுள்ளது. இதனால் பயணம் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்று அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய லாகூர் மண்டல இயக்குநர் ஆசிஃப் பிலால் லோதி, ''இதுகுறித்து அரசு ஆராய்ந்து வருகிறது. புகையின் அளவு மேலும் அதிகரித்தால், செயற்கை மழையைப் பொழியவைத்து காற்று மாசைக் குறைக்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது'' என்றார்.

டெல்லியில் கடந்த நவம்பர் 1-ம் தேதி, காற்று மாசு 542 என்ற அளவில் மிக மோசமான நிலையைத் தொட்டு, நெருக்கடி நிலையை எட்டியது. மக்கள் சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டதை அடுத்து, பள்ளிகளுக்கு 6-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இடையில் குறைந்த காற்று மாசு மீண்டும் அதிகரித்து நேற்று உலக அளவில் காற்று மாசுபாட்டில் முதலிடத்தை டெல்லி பெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x