Published : 15 Nov 2019 05:50 PM
Last Updated : 15 Nov 2019 05:50 PM

குட்டிக் கதை 13: ஸ்வீட் எடு, கொண்டாடு!

“அடுத்த வாரம் நடக்கப் போற அனைத்து பள்ளி நடனப் போட்டிக்கு நம்ம பள்ளி சார்பாக கலந்துக்கப் போறது யாருன்னு கண்டுபிடிக்க முடியுமா?”

“தெரியும் சார், நம்ம விவேக்கும் தரணியும் தானே?”

“சரியா சொன்னீங்க. விவேக், தரணி நீங்க ரெண்டு பேரும் நல்லா பயிற்சி செய்யுங்க. நம்ம பள்ளிதான் முதல் இடம் வரணும். என்ன சரியா?”

“சரி சார். கண்டிப்பா நம்ம பள்ளிக்குத்தான் சார் முதல் பரிசு கிடக்கும் சார்.”

ஆசிரியர் சென்ற பிறகு வகுப்பு மாணவர்கள் அனைவரும் விவேக்கிடமும் தரணியிடமும் பேசிக் கொண்டிருந்தனர்.

“என்ன விவேக்... நீ நல்லா பயிற்சி எடுத்திருப்ப... ஏன்னா நீ நடன வகுப்புக்குப் போற. ஆனா, தரணி எந்த வகுப்பிற்கும் போகலையே, அவன் நல்லா டான்ஸ் ஆடுறானா?”

“ம்ம்… நல்லா தான் ஆடுறான்.”

விவேக் பணக்கார வீட்டுப் பையன். அவன் வீட்டில் எல்லா வசதியும் உண்டு. நடன வகுப்பிற்கும் போய்க்கொண்டு இருக்கிறான். சில நேரங்களில் நடன ஆசிரியர் வீட்டுக்கே வந்து சொல்லித் தருவார்.

ஆனால் தரணி ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். வீட்டில் எந்த வசதியும் கிடையாது. தரணியின் அப்பா விபத்தில் கால்களை இழந்துவிட்டார். தரணியின் அம்மாதான் ஒரு கம்பெனியில் வேலைக்குச் சென்று குடும்பத்தைப் பார்த்துக் கொண்டார். தரணியின் அக்கா சரியாகப் படிக்காததால் ஒரு தையல் கடையில் துணி தைக்கும் வேலைக்குச் சென்று கொண்டிருந்தாள்.

போட்டி நடக்கும் நாளும் வந்தது.

10 மணிக்கு போட்டி ஆரம்பமாகும் என்று அறிவித்தார்கள்.

8 மணிக்கே அனைவரும் தயாராக இருந்தனர்.

“டேய் விவேக், கண்டிப்பா நீதான் முதல் இடம் வரணும். என் ஃப்ரண்ட்ஸ் எல்லோருக்கும் நான் பெருமையா சொல்லணும்” என்றார் அப்பா.

“கண்ணு, என் லேடீஸ் கிளப் மெம்பர்ஸ் எல்லோரும் சொல்லி அனுப்பி இருக்காங்க. கண்டிப்பா நீதான் மொதல்ல வரணும்” என்றார் அம்மா.

விவேக் குடும்பத்தில் உள்ள அனைவரும் வந்திருந்தனர். விவேக்கின் அண்ணன், ஸ்வீட் எல்லாம் கொண்டு வந்திருந்தான்.

“உனக்கு பரதநாட்டியம், மேற்கத்திய நடனம் எல்லாம் தெரியும். எப்படியும் நீதான் ஃப்ர்ட்ஸ் வருவ. அதுல எந்த சந்தேகமும் இல்லை. அதான் ஸ்வீட் வாங்கி வந்திருக்கேன்” என்று அண்ணா கூறினான்.

“உங்க எல்லார் ஆசையையும் கண்டிப்பா நான் நிறைவேற்றுவேன்” என்றான் விவேக்.

தரணியுடன் யாரும் வரவில்லை. அவன் தனியாக வந்திருந்தான்.

போட்டியில் நிறைய மாணவர்கள் நடனமாடினர். அடுத்து “தரணி” என அறிவித்தார்கள்.

தரணி சிறப்பாக நடனமாடினான்.

“இறுதியாக விவேக்” என அறிவித்தனர்.

விவேக் மிக மிகச் சிறப்பாக ஆடினான். எல்லோரும் விவேக்தான் முதலிடம் வருவான் என சொல்லிக் கொண்டிருந்தனர்.

அப்போது நடனம் முடியும் தருவாயில் எதிர்பாராத விதமாக விவேக் தவறுதலாக ஆடினான். பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியாகி விட்டது.

போட்டி முடிவில் “தரணி முதல் இடம் பிடித்து ரூபாய்.50,000 பரிசு பெறுகிறார்” என அறிவித்தனர்.

விவேக்கின் அம்மா கண் கலங்கியபடி ”எனக்குத் தெரியும். நீ வேணும்னேதானே தப்பா ஆடின, ஏன்டா அப்படி செய்த?” என்று கேட்டார்.

“அம்மா, நான் ஜெயிக்கறது உங்களுக்கு பெருமை மட்டும்தான். அந்த பரிசுப் பணம் நமக்குத் தேவையே இல்லை. ஆனா தரணிக்கு அந்தப் பணம் ரொம்ப அவசியம். அவங்க அம்மாவுக்கு ஏதோ ஒரு ஆபரேஷன் செய்யணும்னு சொல்லிட்டு இருந்தான், ‘அப்போ பணம் கொடுத்து உதவியிருக்கலாமே, போட்டியில ஏன் விட்டுக் கொடுக்கணும்’ அப்படின்னு நினைப்பீங்க.

போட்டியில ஜெயிச்சதால அவனுக்கு ஒரு நம்பிக்கை வரும், நம்மாலயும் சாதிக்க முடியும்னு தோணும், ஆனா நான் அப்படி இல்லை, எப்போ வேணும்னாலும் என்னால சாதிக்க முடியும். அதனாலதான் அவனை ஜெயிக்க விட்டேன். என்னப்பா, நான் செய்தது சரிதானே?” என்றான் விவேக்.

“நீ சொல்வதிலும் ஒரு அர்த்தம் இருக்கு” என்று சொல்லி தரணி இருந்த இடத்துக்கு எல்லோரும் சென்றனர்.

“தரணி... இந்தா. ஸ்வீட் எடு, கொண்டாடு” என்று கூறினர். தரணியும் தன் அம்மாவிற்கு ஆபரேஷன் நல்லபடியா நடக்கும் என்ற மகிழ்வோடு சிரித்தான்.

நீதி: அடுத்தவரின் தேவையறிந்து உதவி செய்.

- கலாவல்லி அருள், தலைமை ஆசிரியர், ஊத்துக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x