Published : 15 Nov 2019 02:35 PM
Last Updated : 15 Nov 2019 02:35 PM

உ.பி. மதரஸாக்களில் என்சிசி, என்எஸ்எஸ் பயிற்சி: அரசு முடிவு

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மதரஸாக்களில் உள்ள மாணவர்களுக்கு என்சிசி, என்எஸ்எஸ் பயிற்சி அளிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக மதரஸா வாரியப் பதிவாளர் ராகவேந்திர சிங் கூறும்போது, ''மாணவர்களிடையே ஒழுக்க உணர்வை வளர்க்க அவர்களுக்கு என்சிசி, என்எஸ்எஸ் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம்.

இதற்கான செயல்பாட்டு வழிமுறைகளை உ.பி. மதரஸா கல்வி மையம் அனைத்து மதரஸாக்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது. நாட்டுக்காக மாணவர்களை உத்வேகமூட்டும் வகையில் என்சிசி பயிற்சி அமையும். படிப்பு, பயிற்சி ஆகியவற்றைத் தாண்டி மாணவர்கள் நாட்டுக்காகச் சேவையாற்றவும் கற்றுக் கொள்வர். இதன் மூலம் மதரஸா மாணவர்கள் இந்திய ராணுவத்திலும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும்.

எத்தனை மதரஸாக்கள் இதைச் செயல்படுத்துகின்றன என்பதைத் தொடர்ச்சியான கால இடைவெளியில் வாரியம் கண்காணிக்கும். என்எஸ்எஸ் பயிற்சியும் மாணவர்களின் வளர்ச்சிக்கு முக்கியத் தேவை ஆகும்.

சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், அவசர கால உதவி, இயற்கைப் பேரிடரைக் கையாள்வது ஆகியவை குறித்த விழிப்புணர்வு இந்தப் பயிற்சிகளில் வழங்கப்படும்'' என்று ராகவேந்திர சிங் தெரிவித்தார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x