Published : 15 Nov 2019 10:51 AM
Last Updated : 15 Nov 2019 10:51 AM

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 5 திருக்குறள் ஒப்புவித்த மாணவர்களுக்கு காளான் பிரியாணி பரிசு

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஐந்து திருக்குறளை ஐந்து நிமிடத்தில் கூறிய மாணவ, மாணவிகளுக்கு அரை பிளேட் காளான் பிரியாணி வழங்கப்பட்டது.

திண்டுக்கல்லில் கடந்த மாதம் உலக உணவு தினத்தை முன்னிட்டு பழைய ஐந்து பைசா நாணயம் கொண்டுவருபவர்களுக்கு அரை பிளேட் அசைவ பிரியாணி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு பலரையும் தங்கள் பக்கம் கவனத்தை ஈர்த்தனர் திண்டுக்கல் பேருந்துநிலையம் அருகேயுள்ள முஜிப் பிரியாணி கடையினர்.

அடுத்தகட்டமாக இந்தக் கடை சார்பில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு அறிவிப்பை வெளியிட்டனர். ஐந்து குறள்களை ஐந்து நிமிடத்தில் பிழையில்லாமல் ஒப்புவிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரை பிளேட் காளான் பிரியாணி வழங்க முடிவு செய்தனர்.

மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்றுவிட்டு வந்தபிறகு நேற்று மாலையில் இந்த நிகழ்ச்சி ஓட்டலில் நடந்தது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் இதில் பங்கேற்றனர். பள்ளி முடிந்ததும் மாணவர்கள் பலர் பெற்றோருடன் கடைக்கு வந்து திருக்குறளை ஒப்புவித்து அரை பிளேட் காளான் பிரியாணியை பரிசாக பெற்றுச்சென்றனர். தமிழாசிரியர்கள் மாணவர்கள் சொல்லும் திருக்குறளை சரிபார்த்தனர்.

இது குறித்து கடை உரிமையாளர் முஜிப் கூறுகையில், தமிழை வளர்க்கவும், குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்தவும் குழந்தைகள் தினத்தன்று திருக்குறள் போட்டி நடத்தப்பட்டது. திருவள்ளுவர் புலால் உண்ணாமையை வலியுறுத்துவதால் அசைவ பிரியாணிக்கு பதிலாக காளான் பிரியாணி வழங்கினோம், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x