Published : 14 Nov 2019 02:22 PM
Last Updated : 14 Nov 2019 02:22 PM

கூகுள் டூடுளில் 7 வயது இந்தியச் சிறுமி வரைந்த ஓவியம்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, கூகுள் டூடுளில் 7 வயது இந்தியச் சிறுமி வரைந்த ஓவியம் வைக்கப்பட்டு, சிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14, இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் முக்கிய தினங்களுக்கு டூடுள் வெளியிட்டுச் சிறப்பிக்கும் கூகுள், இந்தியச் சிறுமியின் ஓவியத்தை குழந்தைகள் தின சிறப்பு டூடுளாக வெளியிட்டுள்ளது. குருகிராமைச் சேர்ந்த திவ்யான்ஷி சிங்கால் என்னும் 7 வயதுச் சிறுமி இந்த ஓவியத்தை வரைந்துள்ளார்.

அண்மையில் இந்தியா முழுவதும் டூடுள் 2019 போட்டி நடைபெற்றது. ''நான் வளரும்போது, நம்பிக்கையுடன் பயணிப்பேன்'' என்பதே இந்த ஆண்டின் கருப்பொருளாக இருந்தது. இந்தப் போட்டியில் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் திவ்யான்ஷி டூடுள் போட்டியில் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து அவரின் ஓவியம் குழந்தைகள் தின சிறப்பு டூடுளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

திவ்யான்ஷி வரைந்த ஓவியத்தில், மரங்கள் ஷூக்களை அணிந்திருக்கும். 'நடக்கும் மரங்கள்' என்று தலைப்பிடப்பட்ட அந்த ஓவியம், காடுகள் அழிப்புக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இதுகுறித்து திவ்யான்ஷி கூறும்போது, ''என் பாட்டி வீட்டுக்குப் போகும்போது அங்கிருந்த மரங்கள் வெட்டப்பட்டுக் கொண்டிருந்தன. அதைப் பார்த்த எனக்கு, மரங்கள் நடந்தாலோ, பறந்தாலோ இதைத் தவிர்க்கலாமே என்று தோன்றியது.

நான் வளர்ந்த பிறகு, மரங்களால் நடக்கவோ பறக்கவோ முடியும். இதன் மூலம் மரங்களை வெட்ட வேண்டிய அவசியமில்லை. காடுகள் அழிப்பும் இதன் மூலம் குறையும்'' என்றார் திவ்யான்ஷி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x