Published : 14 Nov 2019 01:12 PM
Last Updated : 14 Nov 2019 01:12 PM

10 லட்சம் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் 'நெகிழி மாசில்லா தமிழ்நாடு' விழிப்புணர்வு: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (நவ.14) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை மற்றும் கிரீன் லைஃப் தொண்டு நிறுவனமும் இணைந்து உலக சாதனை நிகழ்வாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் 'நெகிழி மாசில்லா தமிழ்நாடு' என்ற நிகழ்ச்சி உறுதிமொழி ஏற்று தொடங்கி வைக்கப்பட்டது.

'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' உருவாக்கிட, தமிழக அரசால் ஜனவரி 1, 2019 முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த பிளாஸ்டிக் தடையை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த தலைமைச் செயலாளர் தலைமையில் பத்து உறுப்பினர்களைக் கொண்ட வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதைத் தடை செய்த பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தடை செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் தலைமையில் 17.6.2019 அன்று விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக, பள்ளிக் கல்வித்துறை மற்றும் கிரீன் லைஃப் தொண்டு நிறுவனமும் இணைந்து 'நெகிழி மாசில்லா தமிழ்நாடு' என்ற இயக்கத்தை, முதல்வர் தலைமையில், குழந்தைகள் தினமான நவம்பர் 14 ஆம் நாளான இன்று, உலக சாதனை நிகழ்வாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் 'நெகிழி மாசில்லா தமிழ்நாடு' உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x