Published : 14 Nov 2019 12:47 PM
Last Updated : 14 Nov 2019 12:47 PM

ஆந்திர அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: சிறப்பு அதிகாரி நியமனம்

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்தும் திட்டத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சார்பில் அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது. அதில், ''ஆந்திரப் பிரதேச பள்ளிக் கல்வித்துறை, அனைத்து அரசுப் பள்ளிகள், மண்டல் ப்ரஜா பரிஷத், ஜில்லா பரிஷத் பள்ளிகளில் உள்ள வகுப்புகளை ஆங்கில வழிக் கல்விக்கு மாற்ற முடிவெடுத்துள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி 2020- 2021 ஆம் கல்வியாண்டில் இருந்து 1 முதல் 8-ம் வகுப்பு வரையும் 2021 - 2022 ஆம் கல்வியாண்டு முதல் 9, 10-ம் வகுப்புகளுக்கும் இந்த மாற்றம் நடைமுறைக்கு வர உள்ளது.

எனினும் இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அனைத்து அரசுப் பள்ளிகளையும் ஆங்கில வழிக்கு மாற்றும் செயல் திட்டத்துக்கு வெற்றிச்செல்வி என்னும் ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து நடத்தப்பட்ட கேபினெட் சந்திப்பில், அனைத்துப் பள்ளிகளையும் ஆங்கில வழிக் கல்வி நிறுவனங்களாக மாற்ற ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

தற்போது ஆந்திரா முழுவதும் 34 சதவீத அரசுப் பள்ளிகள் ஆங்கில வழிக் கல்வியைக் கற்பித்து வருகின்றன. அடுத்த கல்வியாண்டில் இருந்து 8-ம் வகுப்பு வரை அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி மட்டுமே கற்பிக்கப்படும் என்றும் படிப்படியாக மற்ற வகுப்புகளுக்கும் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயல்திட்டத்தை நிறைவேற்ற வெற்றிச்செல்வி என்னும் ஐஏஎஸ் அதிகாரியை ஆந்திர அரசு நியமித்துள்ளது. முன்னதாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு இதுதொடர்பான பிரத்யேக அதிகாரங்களை அரசு வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x