Published : 14 Nov 2019 07:45 AM
Last Updated : 14 Nov 2019 07:45 AM

சென்னையில் நவ.16, 17-ல் பள்ளி மாணவர்களுக்கு கலைப் போட்டிகள்: கலை பண்பாட்டுத் துறை அறிவிப்பு

சென்னை

கலை பண்பாட்டுத் துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசைமற்றும் ஓவியப் பிரிவில் கலைப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இதுதொடர்பாக கலை பண்பாட்டுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:கலை பண்பாட்டுத் துறையின் கீழ்இயங்கும் தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 5 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கலைப்பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை, ஓவியம் ஆகிய 4 கலைகளில் போட்டிகள் நடத்தியும், அவற்றில் முதல் பரிசுபெற்றவர்களுக்கு, மாநில அளவில் போட்டி நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. மாநில அளவில்வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7,500, 3-ம் பரிசாக ரூ.5,000 என மொத்தம் 24 மாணவர்களுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

முதல்கட்டமாக 5 முதல் 8 மற்றும் 8 வயதுக்கு மேல் 12 வரையும் 12 வயதுக்கு மேல் 16 வரையும் என 3 வயது வகைப் பிரிவில் வரும் நவ.16-ம்தேதி பரதம், கிராமிய நடனம், குரலிசை போட்டிகளும் நவ.17-ம் தேதி ஓவியப் போட்டியும் நடைபெற உள்ளன. கலைப்போட்டிகள் அனைத்தும் சென்னை, ராஜாஅண்ணாமலைபுரம், டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் நடைபெறுகிறது.

போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் தங்கள் பெயர், வயது, பிறந்த தேதி, வீட்டு முகவரி, பள்ளியின் பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் பிறந்த தேதி சான்றிதழ் கொண்டுவர வேண்டும். போட்டியில் பங்கேற்புக்கான சான்றிதழ், மாவட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும். 8 முதல் 12 மற்றும் 12 முதல் 16 வரையிலான இரு பிரிவில் முதல் பரிசு பெறும் மாணவர்களுக்கு இடையில் மாநில அளவிலான போட்டிகள் நடக்கும். இதில் அரசின் செலவிலேயே பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். மேலும் போட்டி தொடர்பான கூடுதல் விவரங்களை, 044-28192152 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x