Published : 14 Nov 2019 07:40 AM
Last Updated : 14 Nov 2019 07:40 AM

குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து மத்திய அரசின் இணைய தளத்தில் புகார் பதிவு செய்யலாம்

கோவை

குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருப்பது குறித்து மத்திய அரசின் இணைய தளத்தில் புகார் பதிவு செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்ட கோவை மாவட்ட இயக்குநர் டி.வி.விஜயகுமார் கூறினார்.

சர்வதேச குழந்தைகள் தினத்தை யொட்டி, தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டம் சார்பில், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை அவிநாசிலிங்கம் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. திட்ட இயக்குநர் டி.வி.விஜயகுமார் தலைமை வகித்து பேசியதாவது:

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மாணவ, மாணவிகளும் இது தொடர்பாக விழிப்புணர்வு பெற்று, பல்வேறு தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தங்களது பிரச்சினைகள், குறைகள் தொடர் பாக பெற்றோர், ஆசிரியர்களுடன் மனம்விட்டுப் பேச வேண்டும். அப்போதுதான் அதற்குத் தீர்வுகிடைக்கும். பெற்றோரும், குழந்தைகளுடன் தினமும் பேசி, அவர்களது பிரச்சினைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

முன்பெல்லாம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள், குழந்தை களுக்கு பல்வேறு கதைகளைக் கூறுவார்கள். இப்போது கதை சொல்லல் என்பதே இல்லாமல் போய்விட்டது. இந்த நிலை மாற வேண்டும். சமுதாயத்துக்குத் தேவையான நல்ல கருத்துகளை, கதை சொல்லல் மூலமாக மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

நாடு முழுவதும் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தங்களது பகுதியில் 14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட இளம் பருவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால், மத்திய அரசின் www.pencil.gov.in என்ற இணையதளத்தில் புகாரைப் பதிவு செய்யலாம். இதனடிப்படையில் 48 மணி நேரத்தில் அந்தக் குழந்தையை மீட்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், புகார் கொடுப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தைச் சேர்ந்த டாக்டர் ரமேஷ் ராஜா பிரபு பேசும்போது, "மாணவப் பருவத்திலிருந்தே ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும். ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் போன்றவற்றைத் தவிர்த்து, காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். கை நகங்களில் உள்ள அழுக்குகள் மூலம் நோய் பரவும் வாய்ப்பு உள்ளதால், கை நகங்களை வெட்டி, சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் கர்ச்சீப் வைத்திருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, விளையாட்டு ஆகிய வற்றின் மூலம் நமது உடல் நலத் தைப் பாதுகாக்கலாம்" என்றார்.

பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.செல்வராணி வரவேற்றார். தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்ட அலுவலர் பிஜு அலெக்ஸ் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x